திங்கள், 9 டிசம்பர், 2019

ஆனியனும், ஒரு கேக் துண்டும்!

ரித்திர சினிமாக்களில் நீங்கள் கண்டிருப்பதைப் போன்றதொரு பிரமாண்ட அரண்மனை அது. ஆரவாரமும், கூக்குரலும் அன்றுகாலை அதிகமிருப்பது அறிந்து, மன்னனும், மகாராணியும் அரண்மனை மாடத்துக்கு வந்து, அங்கிருந்து வெளியே கவனிக்கின்றனர். கீழே ஏராளமான மனிதர்கள். முகங்களில் பசியும், உடல்களில் வறுமையும் மிகுந்திருக்கிறது. ‘‘மன்னா... சாப்பிட்டு நாளாகிறது. பசி வாட்டுகிறது. எங்கள் குழந்தைகளுக்குக் கூட சரியான உணவு இல்லை. முதியவர்கள் பசி தாங்காமல் வீதிகளில் செத்து விழுகின்றனர். எங்கள் பசி தீர, ரொட்டித் துண்டுகளுக்கு வழி சொல்லுங்கள் மன்னா...’’ - மாடத்தில் தெரிந்த மன்னன் - மகாராணியின் முகங்களில் தீர்வை எதிர்பார்த்து, இடுங்கிய கண்களுடன் அந்த ஜனத்திரள் கூக்குரல் எழுப்புகிறது. அவர்களை நிதானித்து கவனித்தப் பின் மகாராணி இப்படிச் சொல்கிறாள்... ‘‘ரொட்டி கிடைக்காவிட்டால் என்ன...? கேக் சாப்பிடுங்கள்!’’.


ரிவர்ஸ் கியர் வேகம்...


ளும் பாரதிய ஜனதா கட்சியின் தவறான பொருளாதார நடவடிக்கைகள், அதன் முதல் ஐந்தாண்டு காலத்திலேயே அதிகம் விமர்சனத்துக்குள்ளானது. ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு உள்ளிட்ட அதிரடிகள், நாட்டின் பொருளாதா வளர்ச்சியை ரிவர்ஸ் கியருக்கு திருப்பியடித்தன. விளைவாக, வேலை வாய்ப்புகள் குறைந்தன. விலைவாசி எகிறியது. பெரிய நிறுவனங்களே சோடாவில் குளுக்கோஸ் கலந்து குடிக்க வேண்டிய நிலைமைக்கு வந்தன.

ரி. அடுத்த ஐந்தாண்டில் விட்டதை பிடிப்பார்கள் என்று பார்த்தால், நிலைமை இன்னும் மோசம். தெருவுக்கு ஒரு ஷோரூம் திறந்த பன்னாட்டு கார் கம்பெனிகள், ஆட்டோமொபைல் தொழில் நிறுவனங்கள் அடுத்தடுத்து நொடித்து திவாலாகின்றன. தொழில் நடக்கிற லட்சணத்துக்கு, வாரத்தில ரெண்டு நாள் வேலைக்கு வந்தாப் போதும்... என்று தொழிலாளர்களுக்கு லே-ஆஃப் அறிவிக்கின்றன. வேலையிழப்புகள், ஆட்குறைப்புகள் அதிகரிக்கின்றன. மக்களிடம் பணப்புழக்கம் வெகுவாகக் குறைகிறது. அத்தியாவசியப் பொருட்கள் வாங்க இரண்டு சம்பளம் தேவைப்படுகிறது. அட, ஆனானப்பட்ட ஜியோவும், ஏர்டெல்லும் கூட, ஒன்றரை மடங்கு கட்டணத்தை உயர்த்துகின்றன. வோடபோன் நிறுவனம், ‘‘நான் நாட்டை விட்டே போகிறேன்...’’ என்று ‘அந்த’ நடிகர் போல அறிவிக்கிறது. ஐடியா நிறுவனம், அடுத்து என்ன செய்வது என்று ஐடியா கிடைக்காமல் திண்டாடுகிறது.

வெங்.....காயம்!

கோடிகளை விதைத்து, பல கோடிகளை அறுவடை செய்கிறவர்கள் நிலைமையே இப்படி என்றால், அடித்தட்டு அப்பாவி மக்களின் நிலைமை எப்படி இருக்கும்? முதல் ஐந்தாண்டை விட மோசமாக, கவலைக்கிடமாக இருக்கிறது. சாம்பார் வைப்பது கூட அவர்களின் பெருங்கனவாக மாறும் நிலைமையை உருவாக்கித் தந்திருக்கிறது, 2020, ஜனவரி 1ம் தேதி வல்லரசாகப் போகிற துடிப்பில் இருக்கிற நம் தேசம்.


வெங்காயத்தின் விலை மிரட்டுகிறது. கேட்கும் போதே, பச்சை மிளகாயை, பச்சையாய் கடித்தது போல கிர்ர்ர்ராகிறது. காய்கறி விற்பனை சந்தையில் இப்போது பன்னாட்டு நிறுவனங்களும் இறங்கி விட்டன. ‘கீரேய்... கீரேய்...’ என்று ஓங்கிக் குரல் கொடுத்த படி, கூடையில் சுமந்து வந்தவர்களெல்லாம், கடந்த காலங்களுடன் காணாமலாகி விட்டார்கள். வெங்காயத்தின் தாறுமாறு ரேட்டுக்கு, கள்ளச்சந்தைகளில் பதுக்கலே முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

றட்சியால் விளைச்சல் குறைவு, மரபணு மாற்றப்பட்ட புதியரகப் பயிர்களில் கிடைக்கும் விளைச்சலை நீண்டகாலத்துக்கு ஸ்டாக் வைத்துப் பயன்படுத்த முடியாதது என்று வேறு சில பிரச்னைகள், காரணங்களாகக் குறிப்பிடப்பட்டாலும், பதுக்கல் புகாரை புறந்தள்ளி விடமுடியாது. அரசாங்கம் தான் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால், அரசாங்கம் என்ன சொல்கிறது? ‘‘வெங்காயம் விலை கூடிக் கொண்டே போகிறதே’’ என்ற கேள்விக்கு, ‘‘வெங்காயம், பூண்டு எங்கள் குடும்பத்தில் சேர்ப்பதில்லை. ஆகையால், அதுகுறித்து எனக்கு கவலையில்லை...’’ என்கிறது.

வெங்காயம் உங்கள் உணவு அல்ல. அதனால், அதன் விலை உயர்வு பிரச்னைகள் குறித்து உங்களுக்கு கவலையில்லை. சரி. மாட்டிறைச்சியும் கூட உங்கள் உணவு அல்ல. பின்பெதற்காக, அதனை உணவாகக் கொண்டவர்கள் குறித்து நீங்கள் அதிக அக்கறையும், கவலையும் கொண்டீர்கள்? - கேட்கப்படாத, கேட்டும் பதில் தரப்படாத கேள்விகள் இன்னும் நிறைய வரிசையில் இருக்கின்றன. போகட்டும்.

பொறுப்பு... வெறுப்பு!

க்களின் மாதாந்திரச் செலவுப் பட்டியல் கிராப் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதை சரி செய்வதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கை எதுவும் இல்லை. மாறாக, ஜிஎஸ்டி வரி விதிப்பை மேலும் உயர்த்த ஆலோசனை நடப்பதாக அறிவிப்புகள் வருகிறது. சாமானிய மக்களிடம் இருந்து பிடுங்கி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை மேல் சலுகையாக வழங்கும் போக்கு அதிகரித்துள்ளது. வளர்ச்சியின் திசைக்காக காத்திருக்கும் மக்களை வறுமையின் திசை நோக்கித் திருப்புவது நல்ல அரசாங்கத்திற்கு அழகா?

ரசாங்கத்திற்கு ஆயிரக்கணக்கான கோடிகளை வருமானமாக கொட்டிக் கொடுக்கிற பாரத் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை எந்தக் காரணமும் இன்றி, நாட்டின் டாப் 10 பணக்காரர்களுக்கு விற்கும் விபரீதப் போக்கு ஆபத்தின் அறிகுறி. பொருளாதார தடுமாற்றத்தை தடுத்து, வளர்ச்சிக்கான வழிவகை காணவேண்டிய பொறுப்புக் கொண்ட அமைச்சர்களோ, மக்களிடம் வெறுப்புணர்வை, பிரிவு மனப்பாங்கை ஏற்படுக்கிற வண்ணம் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பசிக்குது மன்னர்மன்னா...!

பிரெஞ்ச் தேசத்தில் 16ம் லூயிஸ் (Louis XVI) மன்னன் ஆட்சி புரிந்து கொண்டிருந்த 1700ம் ஆண்டுகளில் நடந்த ஒரு சம்பவம், உலக வரலாற்றில் இன்றளவும் பேசுபொருளாகத் தொடர்கிறது. அப்போது பிரான்ஸ் தேசத்தில் வறட்சியும், வேலையில்லாத் திண்டாட்டமும், அதன் விளைவாக வறுமையும் கோரத்தாண்டவம் ஆடுகிறது. பாதுகாக்கவேண்டிய மன்னனோ, வருவாயைப் பெருக்குகிறேன் பேர்வழி என்று, வரியை இன்னும் அதிகமாக்குகிறான். பட்டினிச் சாவுகள் தினம், தினம் அதிகரிக்கின்றன.

பொறுத்துப் பொறுத்து... வெறுத்துப் போன மக்கள், ஒரு நாள் மன்னனின் அரண்மனைக்கு வருகின்றனர். ‘‘மன்னா... சாப்பிட்டு நாளாகிறது. பசி வாட்டுகிறது. எங்கள் குழந்தைகளுக்குக் கூட சரியான உணவு இல்லை. முதியவர்கள் பசி தாங்காமல் வீதிகளில் செத்து விழுகின்றனர். எங்கள் பசி தீர, ரொட்டித் துண்டுகளுக்கு வழி சொல்லுங்கள் மன்னா...’’ கன்னங்களில் வழியும் கண்ணீருடன் - மாடத்தின் மேல் நின்று தங்களை கவனிக்கும் - மன்னன் 16ம் லூயியைப் பார்த்து மக்கள் கெஞ்சுகின்றனர். லூயி ஏதோ பதில் சொல்ல வருகிறான். அவன் பேச்சை மறித்து, அருகே நின்ற மகாராணி மேரி அன்டாய்னெட் (Marie Antoinette)மக்களைப் பார்த்துச் சொல்கிறாள்... ‘‘ரொட்டி கிடைக்காவிட்டால் என்ன...? கேக் சாப்பிடுங்கள்!’’.

வெங்காயமும்... கேக்கும்!

ரலாற்றுப் புத்தகங்களில் இன்று நாம் படிக்கிற பிரெஞ்ச் புரட்சிக்கான (மே 5, 1789 - நவம்பர் 9, 1799) துவக்கப்புள்ளியாக இந்தச் சம்பவம் (வரலாற்று ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் கூட) எழுத்தாளர்கள், பேச்சாளர்களால் குறிப்பிடப்படுகிறது. 10 ஆண்டுகள், 6 மாதங்கள், 4 நாட்கள் நடந்து, கடைசியில் தோல்வியில் முடிந்தாலும் கூட, அதன் பிறகான, உலகின் பல்வேறு போராட்டங்களுக்கு பிரெஞ்ச் புரட்சியே  முன்மாதிரி. ரஷ்யப் புரட்சி (1917), சீனாவில் மாவோ நடத்திய மக்கள் புரட்சிகளுக்கு பிரெஞ்ச் புரட்சியே வழிகாட்டி.


‘நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை...’ என்கிற, இன்றைய குரலுக்கும், ‘நீங்கள் கேக் சாப்பிடுங்கள்...’ என்கிற இருநூறு ஆண்டுகளுக்கு முந்தைய குரலுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை வரலாறு சுட்டிக் காட்டும்!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் - 

4 கருத்துகள்:

  1. 'கிடைத்ததை சாப்பிடுங்கள்' என்கிற நிலை வராமல் இருந்தால் சரி...

    பதிலளிநீக்கு
  2. அருமை. நீண்ட நாள்களுக்கு பிறகு குட்டீயார் குட்டியாய் செம மெசேஜ் கொடுத்துள்ளார்.

    பதிலளிநீக்கு
  3. மன்னர்மன்னன், முகவூர்11 டிசம்பர், 2019 அன்று PM 6:17

    வரலாற்றில் இருந்து பாடம் படிக்காத சமூகம், அதே வரலாற்றில் தானும் ஒரு பாடமாக எதிர்கால தலைமுறைக்கு மாறி விடும். கட்டுரை அருமை.

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான பதிவு
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...