ஆட்டமிழக்காமல் 63 - ஆடுகளத்தில், பிலிப் ஹியூஸ் கடைசியாக எடுத்த ரன்கள். அந்தப் போட்டியில் அவர் ஆட்டமிழக்கவில்லை. நமக்குத் தெரியும். ஆனால், 63வது ரன்னுக்குப் பிறகு, ஆட்டமிழக்காமலேயே களத்தில் இருந்து வெளியேறுகிறோம் என்று பிலிப் ஹியூஸ் உணர்ந்திருக்க மாட்டார். அடுத்து ஒரு ரன் இனி சேர்க்கவே முடியாது என்றும் அவருக்குத் தெரிந்திருக்காது.
கிரிக்கெட்டின் மிக அபாயமான ஒரு எகிறு பந்து (பவுன்சர்) அவரது வாழ்க்கையை முடித்து வைத்து விட்டது. சாதிப்பதற்கு இன்னும் நிறைய திறமை இருந்தது. ஆனால், 25 வயதிலேயே வாழ்க்கை முடிந்து விட்டது. பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு சில தினங்கள் பாக்கி இருக்கையில்!