சனி, 3 ஜனவரி, 2015

ஹைகூ தெரியும்; ஐ கு தெரியுமா?

ந்திப்புகள் எப்போதுமே இனிமையானவை. ஏதோ சந்தித்தோம்... பிரிந்தோம் என்று இல்லாமல் ஆழமாய், அழுத்தமாய் அந்த சந்திப்பை நினைவில் வைத்திருப்பதற்கு, கிப்ட் கொடுப்பது, பூ கொடுப்பது, இன்னும் ஏதேதோ கொடுப்பது என சில எக்ஸ்ட்ரா டகால்டி வேலைகள் நாம் செய்தாக வேண்டியிருக்கிறது... இல்லையா? இளமை டாலடிக்கிற மொழி என்பதால், தமிழும் சந்திப்புக்கு எக்கச்சக்க முக்கியத்துவம் கொடுக்கிறது. அதற்கென தனி இலக்கணமே வகுத்து வைத்திருக்கிறது. ரொம்ப ஈஸி மேட்டர். ‘எங்கெங்கே இச்... இச்...’ அந்த மேட்டர்தான். படிக்க ஜோரா இருக்கும்.


முருகா... ஞான பண்டிதா!

ம்பெனிக்கு அப்ளிகேஷன் வந்தது. ‘ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிருக்கேன் சார். ஒரு வேலைக் கொடுங்க...’ என்றது அப்ளிகேஷன். கம்பெனி காரர்கள் என்ன செய்தார்கள்? கடுதாசி போட்டு பையனை வரவழைத்தார்கள். ‘நாங்க என்ன நாடகக் கம்பெனியாப்பா நடத்துறோம். வேலையும், வில்லையும் கொடுக்க. பழநியோ, திருப்பரங்குன்றமோ போய் பாருப்பா’ என்று காய்ச்சி அனுப்பி விட்டார்கள். அப்படி என்ன தப்பு செய்தான் பையன்? வேலை கொடுங்க என்று கேட்பதற்குப் பதில், வேலைக் கொடுங்க என்று ஒரு ‘க்’ எக்ஸ்ட்ரா போட்டு விட்டான். வேலை கொடுங்க என்றால்... பணி (ஆங்கிலத்தில் ஜாப் என்று சொல்லுவார்களே, அது!). வேலைக் கொடுங்க என்றால், அறுபடை வீடுகளில் குடியிருக்கிற எம்பெருமான்... முருகப்பெருமான் கையிலே வைத்திருக்கிற ஆயுதம். ஒரு ‘க்’கன்னா எவ்வளவு சிக்கல் செய்து விட்டது பார்த்தீர்களா?

டச்சிங் - டச்சிங் எப்போ?

தமிழில் வல்லினம் மொத்தம் ஆறு எழுத்துக்கள் (க், ச், ட், த், ப், ற்). ஒரு வாக்கியத்தில், இரு சொற்கள் டச்சிங் - டச்சிங் ஆகிற இடத்தில் க், ச், த், ப்... இதில் ஏதாவது ஒரு ஒற்றெழுத்தை எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் போட்டு பயன்படுத்தினோமேயானால், அதை ‘வலி மிகுதல்’ அல்லது ‘வல்லெழுத்து மிகுதல்’ என்று தமிழ் இலக்கணம் குறிக்கிறது. எதற்காக இந்த எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் என்று நீங்கள் கேட்கலாம். கேட்கவேண்டும். ஒரு பொருளை தெளிவாகவும், சரியாகவும் உணர்த்துவதற்கும், தமிழ் மொழிக்கே உரித்தான அந்த இனிமையை மிகச்சரியாக டியூனிங் செய்வதற்கும் வலி மிகுதல் அவசியம் என்கிறார்கள் தமிழறிஞர்கள். தமிழ், அதில் இருந்து கட்டக்கடைசியாக பிரிந்து சென்ற மலையாளம் தவிர்த்து வேறு எதிலும் இந்த வலி மிகுதல் விஷயம் இல்லை.
சரி. வல்லெழுத்துகளில் க், ச், த், ப் மட்டும்தான் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்காக வருமா? ட், ற் இரண்டும் என்ன பாவம் செய்தது? அதை ஏன் ஒதுக்கி வைக்கவேண்டும் என நீங்கள் சமூகநீதி குரல் எழுப்பலாம். ஆனால், வல்லின எழுத்துக்களில் ட, ற இரண்டும் ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வருவதில்லை. என்பதால், மேற்படி ட், ற் இரண்டும் வலி மிகுந்து ஒற்றெழுத்தாக வருவதில்லை. ஓ.கே.வா? அடுத்த விஷயம்... எந்தெந்த இடத்தில் க், ச், த், ப் போடவேண்டும் / போடக்கூடாது? அதற்கு தமிழ் இலக்கணம் படு அருமையான, எளிமையான விதிமுறைகள் வகுத்து வைத்திருக்கிறது. ஒவ்வொன்றாகப் பார்க்கலாமா? உன்னிப்பாக கவனியுங்கள்... ஏற்கனவே சொன்னது போல இது ரொம்ப இன்ட்ரஸ்டிங்.

விதி நம்பர் 1

அ, இ, எ இந்த மூன்று எழுத்துக்களையும் குறித்துக் கொள்ளுங்கள். இந்த மூன்றில் ஏதாவது ஒரு ஒன்று நிலைமொழியாக இருந்து (நிலைமொழி: ஒரு வாக்கியத்தின் முதலில் நிற்கிற சொல்) க, ச, த, ப இந்த நான்கில் ஒன்று வருமொழியின் முதல் எழுத்தாக வருமானால் (வருமொழி: ஒரு வாக்கியத்தில் நிலைமொழிக்கு அடுத்ததாக வருகிற சொல்) அங்கு கட்டாயம் வலி மிகும். அதாவது, எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் போடவேண்டும். (க, ச, த, ப வரிசையில் எது முதல் எழுத்தாக வந்தாலும். க, கு, கூ, கி, கீ, கோ, கொ).

அந்தப் பொண்ணு வருமா?

ஒரு உதாரணம்: அந்தப் பொண்ணு. இந்த வாக்கியத்தில், அந்த என்பது நிலைமொழி. சரியா? நிலைமொழியின் முதல் எழுத்து ‘அ’வில் துவங்குகிறது. அடுத்து, பொண்ணு என்பது வருமொழி. இந்த வருமொழியின் முதல் எழுத்து பொ (அதாவது ‘ப’ வரிசை). என்பதால், இந்த இடத்தில் வல்லெழுத்து கட்டாயம் மிகும். வருமொழியின் முதல் எழுத்தான ‘பொ’ என்கிற வல்லெழுத்து மிகுந்து அங்கே ‘ப்’ என்கிற ஒரு ஒற்று உட்கார்ந்து கொள்கிறது. ஆக, அந்தப் பொண்ணு. ரைட்டா?


அ, இ, எ என்கிற மூன்று எழுத்துக்களில் துவங்குகிற எந்த வார்த்தை முதல் எழுத்தாக வந்தாலும் வலி மிகும்.
அந்த, இந்த, எந்த.
அங்கு, இங்கு, எங்கு.
அப்படி, இப்படி, எப்படி.
அவ்வகை, இவ்வகை, எவ்வகை.
அத்துணை, இத்துணை, எத்துணை.
இன்றைக்கு தமிழ் எழுதும் போது, ‘அந்த பொண்ணு இந்த பக்கம் வந்தால், எந்த கவலையும் இல்லை’ என்று எழுதுகிறார்கள். தப்பு. ‘அந்தப் பொண்ணு, இந்தப் பக்கம் வந்தால், எந்தக் கவலையும் இல்லை’ என்றுதான் இனி எழுதவேண்டும்.

விதி நம்பர் 2

ஒரு வாக்கியத்தின் நிலைமொழி ‘க்கு, ச்சு, த்து, ட்டு, ப்பு, ற்று’ என முடிந்திருந்து (இதை வன்தொடர் குற்றியலுகரம் என்பார்கள். அது பற்றி இன்னும் கொஞ்சம் வாரம் கழித்து) வருமொழி க, ச, த, ப எழுத்துக்களில் துவங்கினால் இச்... இச்... ரொம்ப, ரொம்ப கட்டாயம். மக்கு பையன் என்று சொல்லக் கூடாது. பையன் கோபித்துக் கொள்வான். மக்குப் பையன் என்றால்தான் சரி. மக்குப் பையன், அச்சுத் தொழில் செய்தான் (கள்ளநோட்டு அடித்தான் என்று அர்த்தமில்லை!). எதிர்த்துப் பேசாதே, உப்புக் காத்து, கற்றுக் கொடுத்தாள், விட்டுப் பிரிந்தான் என்பவை இதற்கு உதாரணங்கள். எண்களைக் குறிப்பிடும் சொற்களானாலும், இந்த விதியில் சேரும். பத்துப் பாட்டு, எட்டுத் தொகை என்றுதான் எழுதணும்.

விதி நம்பர் 3ஐ பார்க்கிறதற்கு முன்பாக வேற்றுமை உருபுகளை (Case Signs) ஒரு எட்டு பார்த்து விடுவது நல்லது. ‘ஒன்லி ஒற்றுமை. தமிழில் எதுக்குடா வேற்றுமை?’ என்று கோபக்கார ஹீரோ கண்களை உருட்டியபடி சினிமாவில் கேட்கிறது போல ஆவேசப்படக்கூடாது. இதுவும் சுலப விஷயமே. ஹைகூ தெரிந்திருக்கும். ஐ, கு பற்றியும் தெரிந்து வைத்திருந்தால் போதும். இச்... இச்... இனிமையாகவே இருக்கும்.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...