சனி, 1 நவம்பர், 2014

142 நிச்சயம்; 152 லட்சியம்!


கேரளா எவ்வளவோ போராடிப் பார்த்தது. தகிடுதத்தங்கள் செய்தது. ம்ஹூம்... பலனில்லை. உடைந்து விடும், தகர்ந்து விடும்... உலகமே அழிந்து விடும் என்றெல்லாம் கப்சா விட்டவர்கள், கதை எழுதி படம் எடுத்து பணம் பார்த்தவர்கள் அத்தனை பேர் முகத்திலும் அடுப்புக்கரி பூசி விட்டது முல்லைப் பெரியாறு. 136 அடியைக் கடந்து விட்டது. 142 அடியை நோக்கி கம்பீரமாக உயர்ந்து கொண்டிருக்கிறது.



டித்துக் கொட்டுகிற பருவமழை, இம்முறை அணையை 142 அடி உயரத்துக்கு (உச்சநீதிமன்றம் இப்போதைக்கு அனுமதித்திருக்கிற அளவு) கொண்டு சேர்த்து விடும் என தமிழக விவசாயிகள் மனதார நம்புகிறார்கள். அவர்கள் நம்பிக்கை பலிக்கும். ஆனாலும், இலக்கு 142 அடி அல்ல. அதற்கும் மேலே... முழு உயரமான 152 அடி தண்ணீர் தேக்குவதே லட்சியம். இந்தத் தருணத்தில்.... முல்லைப் பெரியாறு அணை, அதைச் சுற்றிச் சூழ்ந்த பிரச்னை, பாசனப்பரப்பு என சகல விஷயங்களும் உள்ளடக்கிய ஒரு கட்டுரை இங்கே.
அணையை உருவாக்கி நம்மிடம் ஒப்படைத்த கர்னல் ஜான் பென்னிகுக் பற்றியும் விரிவாக ஒரு கட்டுரை பூனைக்குட்டியில் தயாராக இருக்கிறது என்பது  கூடுதல் தகவல்.

பிறக்கும் இடம் தமிழகம்

பெரியாறு நதி மேற்கு தொடர்ச்சி மலையின் தமிழகப்பகுதியில் (சிவகிரி மலை) உற்பத்தியாகி மேற்கு நோக்கி ஓடி அரபிக்கடலில் கலக்கிறது. பெரியாற்றின் நீரை கிழக்கு நோக்கி திருப்பி, மழை மறைவுப் பகுதியான, வறட்சியின் பிடியில் சிக்கியிருந்த மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் அணை கட்ட திட்டமிடப்பட்டது. வைகை ஆற்று நீர் போதுமான அளவிற்கு இல்லாததால், பெரியாறு நீரை வைகைக்கு கொண்டு வந்து, இங்கிருந்து தென் மாவட்ட விவசாயத்திற்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டது.

1790 மார்ச் 6ல் சென்னை மாகாணத்தின் மதுரை மாவட்டம் உதயமானது. 1798ல் முல்லை, பெரியாறு நதிகளை இணைத்து அணை கட்டி, தண்ணீர் முழுவதையும் மதுரை, ராமநாதபுரம் பகுதிக்கு கொண்டுவர மன்னர் சேதுபதி திட்டமிட்டார். போதிய நிதி வசதி இல்லாததால் நிறைவேற்ற முடியவில்லை என அப்போது கைவிடப்பட்டது. 1807ல் மதுரை கலெக்டர் ஜார்ஜ் பேரிஸ் அணை கட்டுவது குறித்து ஆய்வு நடத்த பொறியாளர் கார்டுவெல்லுக்கு உத்தரவிட்டார். இது ஒத்துவராத திட்டம் என 1808ல் கார்டுவெல் தெரிவித்துவிட்டார்.

வைரஸ் திட்டம்

1867ல் மேஜர் வைரஸ் என்பவர் ரூ.17.50 லட்சத்தில் மதிப்பீடு செய்து அறிக்கை அளித்தார். இதற்கு தலைமை பொறியாளர் வாக்கர் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்போதும் தாமதமானது. 1876ல் சென்னை மாகாணம் கடும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டதால் இந்த அணை திட்டம் மேலும் தாமதமானது. இறுதியாக 1882ல் ஆங்கில அரசால் ஏற்கப்பட்டு, கர்னல் ஜான் பென்னிகுக்கிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதற்காக அவர் 1884ல் தயாரித்த அறிக்கை, செலவு திட்டத்திற்கு ஒப்புதலும் கிடைத்தது. 1886 அக்டோபர் 29ல் திருவிதாங்கூர் சமஸ்தானம், சென்னை மாகாணத்திற்கிடையே 999 ஆண்டுகால ஒப்பந்தம் செய்யப்பட்டது.

கட்டுமானப் பணிகள் நடந்த போது பெரியாறு அணை
இதன் பின்னர் 1887ம் ஆண்டு முல்லை பெரியாறு அணை கட்டும் பணி துவங்கியது. பொறியாளர் பென்னிகுக் தலைமையில் பிரிட்டிஷ் ராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது. அடர்ந்த காட்டுப்பகுதியில் எவ்வித வசதியும் இல்லாத நிலையில், கடும் சிரமத்துடன் கட்டுமான பணிகள் நடந்தன. விஷப் பூச்சிகள், காட்டுவிலங்குகள், கடும் மழை, காட்டாற்று வெள்ளம் என பல்வேறு பிரச்னைகளுக்கிடையே அணை கட்டும் பணி வேகமாக நடந்தது. 3 ஆண்டுகள் ரத்தமும், வியர்வையும் சிந்தி கட்டப்பட்ட அணையை, திடீரென பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் அடித்துச் சென்றது.

மனைவியின் சங்கிலி

1895ல் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து பெரியாறு அணை திறப்பு விழாவின் போது எடுக்கப்பட்ட ஸ்பெஷல் படம். உடன் பணியாற்றிய ஊழியர்கள், ஊர் பிரமுகர்களுடன் பென்னிகுக் (கருப்புக்கோட், கையில் தொப்பியுடன் இருப்பவர்).
இதன் பின் இத்திட்டத்திற்கு பணம் ஒதுக்க ஆங்கிலேய அரசு மறுத்து விட்டது. மனம் தளராத பென்னிகுக் தனது சொந்த நாடான இங்கிலாந்து திரும்பிச் சென்றார். படுத்து உறங்கிய கட்டில், மனைவியின் செயின் உள்பட தனது குடும்ப சொத்துக்கள் அனைத்தையும் விற்று அந்த பணத்துடன் தமிழகம் திரும்பினார். இந்த பணம் மூலம் பெரியாறு அணையை கட்டி முடித்தார். 1893ல் 60 அடி உயரத்திற்கும், 1894ல் 94 அடி உயரத்திற்கும், 1895 டிசம்பரில் 155 அடி உயரத்திற்கு கட்டி முடிக்கப்பட்டது. அப்போது சென்னை மாகாண பிரபுவாக, ஆளுநராக இருந்த வென்லாக் பிரபு அணையை திறந்து வைத்தார்.

இந்த அணையில் மின் உற்பத்தி செய்ய 1955ல் திட்டம் வகுக்கப்பட்டது. 1970ல் கேரளாவுடன் செய்த ஒப்பந்தப்படி தமிழகம் 140 மெகாவாட் மின் நிலையத்தை அமைத்தது. தமிழகத்திற்கு வரும் தண்ணீர் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.


2.08 லட்சம் ஏக்கர்

பெரியாறு தண்ணீர் தந்த செழிப்பு... பச்சைப்பட்டு விரித்தது போல கம்பம் பள்ளத்தாக்கு.

முல்லைப் பெரியாறு அணை தண்ணீர் மூலம் தேனி, திண்டுக்கல் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 144 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. தேனி மாவட்டத்தில் கூடலூர், கம்பம், சின்னமனூர், தேனி - அல்லிநகர் ஆகிய நகராட்சிகள், மதுரை மாநகராட்சி, உசிலம்பட்டி, சேடபட்டி கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் திட்டங்கள் இந்த அணை நீரை நம்பித்தான் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

1979 சிக்கல்

பெரியாறு அணையின் 13 மதகுகள் (ஷட்டர்) கீழே இறக்கப்பட்டுள்ள நிலையில். இந்த ஷட்டர்களை கீழே இறக்கினால் மட்டுமே தண்ணீர் அளவு 136 அடிக்கு மேல் உயரும். ஷட்டர் இறக்காவிட்டால், 136 அடியை தொட்டதும் தண்ணீர் வழிந்து இதன் வழியாக இடுக்கி அணைக்குச் சென்று விடும்.

1979ம் ஆண்டில் கேரளாவிலிருந்து வெளியாகும் மலையாள மனோரமா நாளிதழ் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என செய்தியை கிளப்பி விட்டது. இதையடுத்து கேரள அரசு அணையின் நீர்மட்ட உயரத்தை 152 அடியிலிருந்து 136 அடியாக குறைத்தது. கேரள மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் அணையை மேலும் வலுப்படுத்த தமிழக அரசு அனைத்து விதமான முயற்சியையும் தொடர்ந்து மேற்கொண்டது. இதன் பின்னர் 152 அடியாக தேக்கலாம் என இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் பலப்படுத்திய பின்னரும் கேரள அரசு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அனுமதிக்கவில்லை. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வல்லுனர் குழுவை அனுப்பி ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த குழு அறிக்கை அடிப்படையில் 142 அடியாக நீர்மட்டத்தை உயர்த்த 2006ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

நியாயத்துக்கு வெற்றி

இந்த உத்தரவை கேரள அரசு ஏற்க மறுத்தது. அத்துடன் 2006 மார்ச் 18ம் தேதி கேரள சட்டமன்றத்தில் புதிய சட்டத்தையும் நிறைவேற்றியது. இதை எதிர்த்து தமிழக அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இதன்பேரில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையில் இந்திய நீர்வளத்துறை அமைச்சக முன்னாள் செயலாளர் தத்தே, இந்திய நீர் ஆணையத்தின் முன்னாள் தலைமை பொறியாளர் மொஹதா, தமிழக அரசு பிரதிநிதியாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், கேரள அரசின்  பிரதிநிதியாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் ஆகியோர் உறுப்பினர்களாக கொண்ட ஐவர் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு அணையை பலமுறை ஆய்வு செய்து 25.4.2012ல் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை அளித்தது. இதில், அணை பாதுகாப்பாக, பலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லோதா தலைமையிலான அமர்வு 2014 மே 7ம் தேதி தீர்ப்பளித்தது. இதன்படி நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தவும், அணையை கண்காணித்து பராமரிக்க மத்திய நீர்வளக்குழுவை சேர்ந்த அதிகாரி தலைமையில் 3 பேர் குழுவை அமைக்கவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவுப்படி அமைக்கப்பட்ட நாதன் தலைமையிலான குழு, அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தியுள்ளது. 1979ல் உருவான சிக்கலுக்கு 35 ஆண்டுகளுக்கு பின் 2014ல் நியாயமான தீர்வு கிடைத்துள்ளது.

கூடுதலாக 1.5 டிஎம்சி தேக்கலாம்

அணை நீர்மட்டம் 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்வதன் மூலம் கூடுதலாக 1.5 டிஎம்சி நீரை தேக்கலாம். ஒரு டிஎம்சி மூலம் 10 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும். 1.5 டிஎம்சி மூலம் 15 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். ஏற்கனவே பாசன வசதி பெறும் 2 லட்சத்து 8 ஆயிரம் ஏக்கரில் விளையும் பயிரை காப்பாற்ற கடைசி கட்ட தண்ணீருக்கு இந்த 1.5 டிஎம்சி போதுமானது. 1.5 டிஎம்சி கூடுதல் தண்ணீரால் 2.08 லட்சம் ஏக்கரும் பயன்பெறும். 152 அடி வரை தேக்கினால் 4.5 டிஎம்சி தேக்கலாம். தமிழகத்திற்கு ஆண்டுதோறும் சராசரியாக 15 டிஎம்சி தண்ணீர் பெறப்படுகிறது. அதிகபட்சம் 30 டிஎம்சியும், வறட்சி காலத்தில் 8 முதல் 10 டிஎம்சி வரையிலும் தண்ணீர் எடுக்கப்பட்டுள்ளது.

ஷட்டர்கள் அடைக்கப்படாததால், 136 அடிக்கு மேல் நீர்மட்டம் உயர்ந்ததும், தண்ணீர் வெளியேறி இடுக்கி அணைக்குச் செல்கிறது. (பழைய படம்)

1979ம் ஆண்டுக்கு பின் அணை நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்ட பின்னர் 10 முறை அணை நிரம்பி தண்ணீர் வீணாக வெளியேறியுள்ளது. ஒரு முறை ஒரு டிஎம்சி முதல் 3 டிஎம்சி வரை தண்ணீர் இடுக்கி அணைக்குச் சென்றது. 14.11.2006 முதல் 1.12.2006 வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 4.2 டிஎம்சி தண்ணீர் விணாக கடலுக்கு சென்றது.

முடிவுக்கு வந்த பித்தலாட்டம்


ஆசியாவின் இரண்டாவது பெரிய ஆர்ச் அணையான இடுக்கி டேம்.
கேரளாவிலுள்ள இடுக்கி அணையிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. பெரியாறு அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர் இடுக்கி அணைக்கு சென்றால் கூடுதல் மின்சாரம் தயாரிக்க முடியும் என்பதுதான் கேரளாவின் திட்டம். இதை செயல்படுத்த கிளப்பி விடப்பட்ட பொய்மூட்டைதான் பெரியாறு அணை பலமிழந்துவிட்டது என்பது. கேரளாவின் ஏமாற்று திட்டம் வெற்றி பெற்றதால், அணை நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது. ஆனால் கேரளா எதிர்பார்த்தபடி கூடுதல் தண்ணீர் பெரிய அளவில் இல்லை. எதிர்பார்த்த மின் உற்பத்தி பெரியாறு தண்ணீரால் கிடைக்கவில்லை.

கேரள பித்தலாட்டம் 1
நொந்துபோன கேரளாவின் அடுத்த குண்டுதான், பெரியாறு அணையை உடைத்துவிட்டு, புதிய அணை கட்ட வேண்டும் என்பது. அணையை உடைத்துவிட்டால் 136 அடிக்கு கீழே உள்ள தண்ணீரும் இடுக்கி அணைக்கு கிடைக்கும். அப்போது கூடுதல் மின் உற்பத்தி செய்யலாம் என கணக்கு போட்டது. ஆனால், நியாயத்திற்கே இறுதி வெற்றி என்ற வகையில் உச்சநீதிமன்றம் மூலம் தமிழகத்திற்கு கிடைத்துள்ள வெற்றியால் 142 அடி தேக்க வழி கிடைத்துள்ளது.

கேரள பித்தலாட்டம் 2
 பெரியாறு தண்ணீரால் கிடைக்கும் மின்சாரத்தை விட நெய்வேலி திட்டம் மூலம் 4 மடங்கு மின்சாரத்தை தமிழகம் உதவியால் கேரளா பெறுகிறது. கூடங்குளத்தில் இருந்தும் மின்சாரம் போகிறது. இந்த நிலையிலும் பெரியாறு அணையை இடிக்க கோரிய கேரளாவின் ஏமாற்று வேலைக்கு இயற்கை மரண அடி கொடுத்து விட்டது.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

3 கருத்துகள்:

  1. விரிவான கட்டுரையாக, நிறைவான தகவல்களுடன் இருக்கிறது. எளியை£ன நடையாக இருப்பதற்கு பாராட்டு. பென்னிகுயிக் கட்டுரை எப்போது வரும்? அதை படிக்க ஆர்வமாக இருக்கிறேன். அந்தோணி தாஸ், கட்டப்பனா

    பதிலளிநீக்கு
  2. இன்றைய தலைமுறையினர் படிக்க வேண்டிய
    அருமையான வரலாற்று பதிவு.... வாழ்த்துக்கள் kk
    குறிப்பு......
    அனை கட்டுமானப்பணி தொடங்கிய ஆண்டு 1987 என்று தவறாக உள்ளது. 1887

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறுக்கு மன்னிக்கவும். உடனே மாற்றி விட்டேன். மிக்க நன்றி சார்.

      நீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...