திங்கள், 10 அக்டோபர், 2016

கல்லை மட்டும் கண்டால்....

‘சிந்து சமவெளி... நம்ம ஏரியா என்று எழுதறது இருக்கட்டும். அதுக்கு நீங்க கொடுக்கிற ஆதாரம் பத்தாது சார். இன்னும் நிறைய எவிடென்ஸ், அதுவும் ஆர்க்கியாலஜிக்கல் எவிடென்ஸ் வேணும். அப்பத்தான் நம்ப முடியும்!’ என்று போடியில் இருந்து சூசை ஜெபராஜ் தொடர்பில் வந்தார். அவருக்கு, நமது பதில் இதுதான்: ‘ஒன்றல்ல ஜெபராஜ் சார். இன்னும் நூறு வாரம் எழுதுகிற அளவுக்கு ஆதாரம் இருக்கிறது. அவ்வளவு எழுத அவகாசம் இல்லாதபடியால், ஒரு பானை எவிடென்ஸூக்கு பதமாக, இங்கே ஒரு எவிடென்ஸ்!’.


பாபநாசம்... த்ரிஷ்யம்!

மிழகத்தில் கொடுமணல், அழகன்குளம் பகுதி தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த தடயங்கள், தமிழி எழுத்து வடிவம், பிராமிக்கு முற்பட்டது என்பதையும், சிந்து சமவெளி எழுத்து வடிவத்துக்கும், இதற்கும் நெருங்ங்ங்ங்கிய தொடர்பு இருப்பதையும் ஆயிரம் வாட்ஸ் அளவுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டின. ஆனால், அறிஞர் சமூகம், போடி ஜெபராஜ் சார் போல, ‘இன்னும்... அதுக்கும் மேல...’ என்று ஆதாரங்கள் கேட்டன. அப்படியாகப்பட்ட சூழலில் ஒரு நாள்.... (ஃப்ளாஷ்பேக் துவங்குகிறது!)

மயிலாடுதுறைக்கு பக்கத்தில் செம்பியன்கண்டியூர் என்கிற சின்ன கிராமம். பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் சண்முகநாதன், வார விடுமுறை நாளொன்றில் செடி நடுவதற்காக தனது தோட்டத்தில் குழி தோண்டிக் கொண்டிருக்கிறார். மண்வெட்டியால் சதக்... சதக் என கொத்தி அள்ளி மண்ணை வீசிக் கொண்டிருந்தவருக்கு - பாபநாசம், த்ரிஷ்யம் படத்தில் வருவது போல - காத்திருந்தது ஒரு ஷாக். ஓங்கி ஒரு இறக்கு இறக்கிய போது... மண்வெட்டி மண்ணுக்குள் புதைந்திருந்த ‘ஏதோ ஒன்றுக்குள்’ சிக்கிக் கொண்டது. எடுக்க வரவில்லை. பக்கத்தில் இருந்த மண்ணை தோண்டி அகற்றி, மண்வெட்டியை கஷ்டப்பட்டு பிடுங்கி எடுத்த போது... கூடவே ‘அதுவும்’ வெளியே வந்தது. அந்த ‘அது’ என்னது?

தண்ணியக் குடிங்க!

ருப்பாய் இருந்தது. உலோகப்பொருள் போலவும் இருந்தது. மிகக் கடினமான கல் மாதிரியும் இருந்தது. இன்னதென்று அடையாளம் காணமுடியாத படி வினோத வடிவில் இருந்த ‘அதை’ ஒரு மஞ்சள் பையில் சுற்றி எடுத்துக் கொண்டு, தொல்பொருள் துறையில் பணிபுரியும் நண்பர் முத்துச்சாமியிடம் காட்டினார். ‘கல்லை மட்டும் கண்டால்... கண்டுபிடிப்புகள் தெரியாது’ என்று புரிந்து கொண்ட தொல்பொருள் துறை அலுவலர் முத்துச்சாமி, அதை பத்திரமாக பார்சல் செய்து தனது உயர் அதிகாரிக்கு அனுப்பி வைத்தார். அந்தக் கல்லை அவர்கள் ஆய்வு செய்து பார்த்தார்கள்... பிரமித்துப் போனார்கள். இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்தப் பிறகே நார்மலுக்கு வரமுடிந்தது. காரணம்...?

ந்தக் கல்... வெறும் கல் அல்ல. புதிய கற்காலத்தில்  (Neolithic  Period அதாவது, கிமு 4500 - கிமு 2000) வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய கற்கோடாரி. இன்றைக்கிருந்து சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. அந்த கற்கோடாரியை நுனி முதல் அடி வரை ஆராய்ந்தார்கள். பேனாவில், பென்சிலில் நாம் பெயர் எழுதி வைப்பது போல, அந்த கோடாரியிலும் சில சித்திர வடிவ எழுத்துகள் இருந்தன. சிந்து சமவெளி நாகரிக எழுத்து வடிவத்துக்கும், இந்த கற்கோடாரியில் இருந்த சித்திர எழுத்து வடிவத்துக்கும், தமிழ் சினிமாவில் டபுள் ஆக்ட் போடும் நடிகர்கள் போல அப்படி ஒரு உருவ ஒற்றுமை. கோடாரி குறிந்த தகவல்களையும், அதில் இருந்த எழுத்து வடிவங்களையும் காப்பி செய்து, தொல்லியல் துறையில், உலகின் மிக முக்கியமான ஆய்வாளராக மதிக்கப்படும் அஸ்கோ பர்போலாவுக்கு (Asko Parpola) அனுப்பி வைத்தார்கள்.

யார் இந்த அஸ்கோ பர்போலா? பின்லாந்து காரர். 1941ல் பிறந்தவர். இன்றைய தேதியில், உலகின் தலைசிறந்த தொல்லியல் ஆய்வாளராக மதிக்கப்படுபவர். ஹெல்சின்கி பல்கலைக்கழகத்தில் (University of Helsinki) பேராசிரியர். சிந்து சமவெளி நாகரிகம் குறித்து ஆய்வு மேல் ஆய்வு செய்து எக்கச்சக்கமாக கட்டுரைகள், புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். அது சம்பந்தமாக மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார். இந்த அஸ்கோ பர்போலா சாரிடம் தான், போன பாராவில் நாம் பார்த்த கற்கோடாரி தகவல்கள் சென்று சேர்ந்தன.

கொல்லாதீங்க!

கோடாரி... கோடாரினு கொலையா கொல்லாதீங்க சார் என்று யாரும் போஸ்ட் கார்ட் அனுப்புவதற்குள் சுருக்க்க்க்கமாக மேட்டரை முடித்து விடலாம். கோடாரியில் இருந்த சித்திர வடிவ எழுத்துக்கள் மூலம் நாம் புரிந்து கொள்ளவேண்டிய சில பாயிண்ட்ஸ் இங்கே:
* கோடாரியில் இடமிருந்து வலமாக நான்கு எழுத்துகளும், ஜாடி போல ஒரு படமும் இருந்தன.
* இந்த நான்கு எழுத்துகளை படிக்கும் போது ‘முருகு’ என்கிற மாதிரியான உச்சரிப்பு வருகிறது.
* இந்த எழுத்துகளும், சிந்து சமவெளி எழுத்துகளும் ஏறக்குறைய, அச்செடுத்தது போல ஒரே மாதிரியாக இருக்கின்றன.

- இந்த மூன்று பாயிண்ட்ஸ் மட்டும் இப்போதைக்குப் போதும். அஸ்கோ பர்போலா இந்தக் கோடாரி மேட்டருக்கு முன்பாக வெளியிட்டிருந்த தனது ஆய்வுக்கட்டுரைகளில் சில விஷயங்களை அழுத்தமாக பதிவு செய்திருந்தார். ‘‘சிந்து சமவெளி மக்கள் (ஹரப்பா) திராவிட மொழியையே பேசியிருக்க வேண்டும் என்று ஆய்வுகளில் தெரிய வருகிறது. பழந்தமிழ் இலக்கியங்களை படிக்கும் போது, சிந்துவெளி மக்களின் மதங்கள், கலாச்சாரங்களை புரிந்து கொள்ளமுடிகிறது...’’ - இது பர்போலா சாரின் வாக்குமூலம். கோடாரி எழுத்து ஆதாரத்துடன், சிந்துவெளி நாகரிகம், தமிழ் நாகரிகமே என உறுதி செய்கிற அவரது ஆய்வுமுடிவுகளை அடுத்த வாரம் இன்னும் விரிவாக, எளிமையாக பார்க்கலாம். ரைட்டா?

சித்திரம் எங்கே?

தற்கு முன்பாக... ‘‘எல்லாம் சரி. தமிழ்நாட்டில எங்க சார் இருந்திச்சி சித்திர வடிவ எழுத்து...???’’ என்று மூன்று கேள்விக்குறி போட்டு யாராவது கேள்வி கேட்கலாம்.
‘‘காணப்பட்ட உருவம் எல்லாம்

மாணக் காட்டும் வகைமை நாடி

வழுவில் ஓவியன் கைவினைபோல

எழுதப் படுவது உருவெழுத்தாகும்...’’

- தமிழ் இலக்கண சூத்திரம் இது. சித்திர வடிவ எழுத்துகளை நமது இலக்கணங்கள் ஓவிய எழுத்து, கண் எழுத்து, உரு எழுத்து என்று பெயர் சூட்டி அழைத்திருப்பதை இந்த பாடல் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது என்ற தகவலுடன் இந்த வாரத்துக்கு வணக்கம் சொல்லலாமா?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...