சனி, 6 அக்டோபர், 2018

இப்பாலே வா... சாத்தானே!

‘‘அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அல்லாஹ்வைத் திட்டுவார்கள். ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம். அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது....’’ - திருக்குர்ஆன், சூரத்துல் அன்ஆம் (ஆறாவது) அத்தியாயத்தின் 108வது வசனம் இப்படி உபதேசிக்கிறது. நாலுமாவடி மோகன் சி லாசரஸ் உள்ளிட்ட, இன்றைக்கு மத போதகம் செய்கிற அத்தனை பிரசங்கிகளுக்கும் இந்த வசனத்தில் இருக்கிறது அடிப்படை பாடம்.


ந்தச் சின்னஞ்சிறிய கட்டுரையை துவங்குவதற்கு முன்னதாக, குட்டியாக ஒரு தன்னிலை விளக்கம்: நான் இந்துமத அனுதாபியோ, அடிப்படைவாதியோ அல்ல. பெயர் தவிர்த்து, வேறு எந்த மத அடையாளங்களும் என்னிடத்தில் இல்லை. இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் மட்டுமல்ல.. ஏனைய பவுத்த, சமண, யூத, இன்னபிற  மதங்களையும் கூட ஒரே தூரத்தில் தான் வைத்திருக்கிறேன். நல்ல கருத்துக்கள் எந்த மதத்தில் இருந்தாலும் எடுத்துக் கொள்வதிலும், பயன்படுத்துவதிலும் எனக்கு தயக்கம் இருந்ததில்லை. மதத்தின் பெயரால் விதைக்கப்படுகிற வெறுப்புக் கருத்துக்களை ஒருபோதும் ஆதரித்ததில்லை. ஆதரிப்பதில்லை. நமது பூனைக்குட்டி வலைத்தளத்தில் இந்துமத அடிப்படைவாதிகளின் அக்கப்போர்கள் குறித்து எண்ணற்ற கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன. அந்தக் கட்டுரைகள் எந்த மனநிலையில் எழுதப்பட்டனவோ, அதே நடுநிலையில் துளியும் பிசகாது, எழுதப்பட்டதே இந்தக் கட்டுரை.

இயேசு விடுவிக்கிறார்...


தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகேயுள்ள நாலுமாவடியில் ‘இயேசு விடுவிக்கிறார்’ என்ற பெயரில் 1978ம் ஆண்டு முதல் ஊழியம் செய்கிறார் சகோதரர் மோகன் சி லாசரஸ். இவரது ஊழியக் கூட்டங்களுக்கும், பிரசங்கங்களுக்கும் கிறிஸ்துவ மக்களின் எண்ணிக்கைக்கு இணையாக - சமயத்தில் அதை விடவும் அதிகளவில் - இந்து சகோதரர்களும் செல்வது வாடிக்கை. தனிப்பட்ட முறையில், இவரது பிரசங்கமும், பிரசங்கம் செய்கிற முறையும் எனக்கே மிகவும் பிடிக்கும். இந்து மதம், கோயில்கள் குறித்த இவரது சர்ச்சைக்குரிய ஊழியப் பேச்சு ஒன்று சமீபத்தில் சமூக வலைத்தளங்கள் வழியாக பதற்றத்தை பற்ற வைத்துக் கொண்டிருக்கிறது.

‘‘சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள்... (மத்தேயு 5:9)’’ என்கிற பைபிள் வசனங்களுக்கு பெருமை சேர்ப்பதாக சகோதரர் லாசரஸின் அந்த ஊழியப் பேச்சு இல்லை. ‘‘சாத்தான் தற்போது தமிழகத்தை குறிவைத்திருக்கிறான்....’’ என்று தனது பேச்சைத் துவக்குகிற லாசரஸ், இங்குள்ள இந்து கோயில்களை சாத்தானின் அரண் என்று குறிப்பிடுகிறார். திருத்தணி, காஞ்சிபுரம் என கோயில் நகரங்களை முழுக்க சாத்தானின் அரண்கள் என்று குறிப்பிடுகிற லாசரஸ், இந்தக் கோயில்கள் வாயிலாக சாத்தானின் கிரியைகள் நடப்பதாகவும் தெரிவிக்கிறார்.

‘அதிக’ பிரசங்கி!


லாசரஸின் இந்தப் பேச்சு, பொதுவெளியில் மிகுந்த சர்ச்சையையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பற்ற வைக்க கொள்ளிக்கட்டை கிடைக்காதா என காத்துக் கிடந்த சில இந்துமத அமைப்புகள், இந்தப் பேச்சை உடும்பாக பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். விளைவு...? சமூக வலைத்தளங்களுக்குள் நுழைய முடியவில்லை. கிறிஸ்துவ மதம் குறித்தும், இயேசுவின் பிறப்பு, பைபிளில் உள்ள வசனங்கள், பிரசங்கிகளின் அதிகபிரசங்கித்தனம் என்று வளைத்துக் கட்டி வறுத்துக் கொண்டிருக்கிறார்கள் அடிப்படைவாதிகள்.


கிறிஸ்துவ தேவாலயங்கள் என்பவை, கிறிஸ்தவர்களுக்கானவையாக மட்டும் அல்லாமல், ஒரு பொதுவான வழிபாட்டுத் தலமாகவே நமது ஊர்களில் இன்றளவும் விளங்கி வருகின்றன. மன நிம்மதி தேடுகிற யாவரும் மத மாச்சர்யங்கள் கடந்து, அங்கு செல்லமுடியும். தாழிட்டு பிரச்னைகளை கூறமுடியும். விண்ணப்பப் பாரங்களில் தங்கள் மனபாரம் இறக்கி வைத்து ஆறுதல் தேடமுடியும். கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு சென்று, திரும்புகிற இந்து சகோதரர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகம். வேளாங்கண்ணி, வாடிப்பட்டி மாதா ஆலயங்களுக்கு வருகிறவர்களில் கணிசமானவர்கள் இந்துக்கள்.

மத மாற்றம்... குற்றமா?

ந்து, கிறிஸ்துவ சமூகங்களிடையே நிலவுகிற சுமுகமான, பலமான, நட்பை சீர்குலைக்கிற வகையில் அமைந்து விட்டது லாசரஸின் சாத்தான் பேச்சு. மத மோதல்கள் மலிந்து வருகிற இந்த இக்கட்டான காலகட்டத்தில், இவரது இந்த பொறுப்பற்ற பேச்சு மிக வன்மையான கண்டனத்துக்குரியது. ஒரு மிகப்பெரிய ஊழிய சபையின் தலைவர், தனது பொறுப்பை உணர்ந்து பேசவேண்டாமா? அரசியல்கட்சி மேடைகளில் பேசுகிற நான்காம், ஐந்தாம் தர தலைவர்கள் போலவா, சாத்தான்... பூதம் என்று கல்லெறிவது?

த மாற்றம் என்பது குற்றமோ, பாவமோ அல்ல. மத மாற்றத்துக்கு அடிப்படையான மன மாற்றம், இயல்பானதாக இருக்கவேண்டும். எனது மதத்தில் இருக்கிற உயர்ந்த கருத்துக்கள், வழிகாட்டுதல்களை எடுத்துக் கூறி பிரசங்கம் செய்வது ஏற்றுக் கொள்ளத்தக்க வழிமுறை. மாற்றாக, பிற மதங்கள் மீது சேற்றை வாரி இறைப்பது, நாகரிகமான செயல் அல்ல. ‘‘எனது வீடு அழகானது. வசதியானது. பெரியது. குறைகளற்றது...’’ என்று எனது தோழனிடம் நான் சொல்வதற்கு உரிமை இருக்கிறது. தவறில்லை. ஆனால், ‘‘உனது வீடு அழகற்றது. எனது வீடு போல வசதிகளற்றது. மிகவும் சிறியது. மனிதர் வசிக்க தகுதியற்றது...’’ என்று அவனிடத்தில் நான் சொல்வது அநாகரிகமானது. பண்பான செயல் அல்ல. தனது பெருமையை உயர்த்திப் பிடிக்க, அடுத்தவர் மனதை புண்படுத்துகிறவர், நாகரிகமான மனிதராகக் கருதப்பட மாட்டார். தனது மதத்தை உயர்த்திப் பிடிப்பதற்காக, இந்து மதத்தையும், அதன் கோயில்களையும் விமர்சித்துப் பேசிய லாசரஸின் பேச்சு, நிச்சயமாக நாகரிகமானது அல்ல.

யார் நீதிமான்?

ந்த வேதமும், பிற மதங்களையோ, மதத்தினரையோ துவேஷிக்கக் கற்றுத் தரவில்லை.  ‘‘...எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்,’’ என்கிறது பைபிள் (1 தீமோத்தேயு 2:4). எல்லா மனுஷரும் என்கிற வார்த்தைகளில், உலகில் உள்ள அனைவரும் அடங்கி விடுகிறார்கள் இல்லையா? ‘‘எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ, அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்...’’ என்கிற அப்போஸ்தலர் 10:35 வசனத்தில், ‘எந்த ஜனத்திலாயினும்...’ என்கிற வார்த்தைகளுக்கு மெய்யான அர்த்தம் மோ. சி. லாசரஸ் அறியாததா?


ண்ணன், தம்பிகளாக பழகுபவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் (அதிக)பிரசங்கிகளுக்கு பைபிள் இன்னும் தெளிவாகவே உபதேசம் செய்கிறது. ‘‘நியாயப் பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல. நியாயப் பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்...’’ - ரோமர் 2:13. நாலுமாவடி காரருக்கு இந்த வசனத்தின் அர்த்தம் புரிகிறதா என்ன?

கிறிஸ்துவ மதம் பற்றி உயர்த்திப் பிடித்துச் சொல்வதற்கும், எழுதுவதற்கும் டன், டன்னாக பைபிளில் விஷயம் இருக்கிறது. எழுதினால்... எழுதிக் கொண்டே போகலாம். பேசினால், பேசிக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு விஷயம், மனித வாழ்வியலுக்குத் தேவையானவை இருக்கிறது. அதில் ஒன்றிரண்டை எடுத்து விட்டாலே போதும். ஆறுதல் தேடி அலைந்து கொண்டிருக்கிற அப்பாவிக் கூட்டம், ‘ஆண்டவரே...’ என்று கதறிய படி, நாலுமாவடி ஊழியக் கூட்டத்துக்கு பஸ் பிடித்து தேடி, ஓடி வந்து விடாதா?

ளிய இந்த வழிமுறைகள் இருக்க... அப்பாலே போகிற சாத்தானை, இப்பாலே வா என வரிந்து கட்டி அழைக்கிற வேண்டாத வேலை எதற்காக?

சத்துருக்களை நேசித்தால்...?

‘‘நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். உங்களுடைய சத்துருக்களை நேசியுங்கள். உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள். உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்....’’ மலைப் பிரசங்கத்தில் (மத்தேயு 5:43...) உலக மாந்தர்களுக்கு தேவமைந்தன் எடுத்துக் கூறிய அந்த மிக உயர்ந்த கருத்துகளை, வேதப்புத்தகத்தை கையில் வைத்திருக்கிறவர்கள் மறக்கலாமா? சத்துருக்களை நேசிப்பதால் என்ன நன்மையாம்? உலக ரட்சகனின் அடுத்தடுத்த வரிகளை படித்துப் பாருங்களேன்...


‘‘இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவிற்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள். அவர் தீயவர்கள் மேலும் நல்லவர்கள் மேலும் தமது சூரியனை உதிக்கச்செய்து, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப் பண்ணுகிறார். உங்களை நேசிக்கிறவர்களையே நீங்கள் நேசிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? வரி வசூலிப்பவர்களும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா? உங்களுடைய சகோதரர்களை மட்டும் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? வரி வசூலிப்பவர்களும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா? ஆகவே, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதா பூரண சற்குணராக இருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராக இருக்கக்கடவீர்கள்...’’ - எவ்வளவு உயர்ந்த கருத்துக்கள்? இதையல்லவா  ஒரு பிரசங்கி எடுத்துக் கூறவேண்டும்? சாத்தான், பூதம் என்று நெருப்பள்ளி வீசுவது ஒரு வேதக்காரருக்கு அழகா?

உங்களுக்கு உங்கள் மார்க்கம்...


பைபிள் மட்டுமல்ல... குர்ஆனும் சமூக நல்லிணக்கத்தை உயர்த்திப் பிடிக்கிறது. இந்தக்  கட்டுரையின் முதல் வரியை படித்திருப்பீர்கள். பிற சமூகத்தின் தெய்வங்களை திட்டாதீர்கள் என்று தனது வேதத்தை பின்பற்றுபவர்களை அது கண்டிக்கிறது. திட்டினால், பதிலுக்கு அவர்கள் அல்லாஹை திட்டுவார்கள். உங்கள் தெய்வத்தை அவர்கள் திட்ட, நீங்களே காரணமாக இருக்கலாமா என்கிறது? எவ்வளவு உயர்ந்த தத்துவம்?

‘‘றைமார்க்கம் தொடர்பான விஷயத்தில் எவர் உங்களுடன் போர் புரியவில்லையோ; உங்களை உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றவில்லையோ அவர்களிடம் நீங்கள் நல்லவிதமாகவும், நீதியுடனும் நடப்பதிலிருந்து அல்லாஹ் உங்களை தடுப்பதில்லை! திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கின்றான்...’’ - என்கிற திருக்குர்ஆன் (3:42-47), மத ஒற்றுமையின் தேவைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்று பாருங்கள்... ‘‘நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவன் அல்ல.மேலும் நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்ல. உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்..’’ - திருக்குர்ஆன் (109: 4-6).

‘உங்களுக்கு உங்களுடைய மார்க்கம். எனக்கு என்னுடைய மார்க்கம்...’ - இதுபோதுமே. பிரச்னையே வராதே? இறைவேதங்கள் தெளிவாகத்தான் இருக்கின்றன. கடைபிடிப்பவர்களும், கற்றுத் தருபவர்களும் தான் பிரச்னை.

ஈரோட்டுக்காரர் சொன்னது சரிதானோ?


ன்றைக்கு தமிழகத்தின் பல காவல்நிலையங்களிலும் லாசரஸ் மீது புகார்கள். வழக்குகள். நிலைமை விபரீதமானதும், இது பொதுக்கூட்டத்தில், பொதுமக்களுக்காக பேசிய பேச்சு அல்ல. சில ஆண்டுகளுக்கு முன், கிறிஸ்துவ ஊழியர்களுக்கான தனிப்பட்ட கூட்டத்தில் பேசிய பேச்சு என்று விளக்கம் தந்திருக்கிறார் மோகன். அதுவும் தவறுதானே லாசரஸ் பிரதர்?


தற்காக, இந்து மதம், கோயில்கள் குறித்து, உங்களை நம்பி வந்த கிறிஸ்துவ சகோதரர்கள் மனதில் வெறுப்பை விதைக்கவேண்டும்? ஒரு சாதித்தலைவனது பேச்சுக்கு ஒப்பானதில்லையா உங்களது இந்தப் பேச்சு. சாதிச் சங்க கூட்டங்களில் பேசுகிற சாதித் தலைவர்கள்... ‘நமது பரம்பரை ஆண்ட பரம்பரை. அடுத்த சாதியெல்லாம் இன்றைக்கு வாழ்வது நாம் போட்ட பிச்சை...’ என்றெல்லாம் அகங்காரமாக பேசுவார்களே? கேட்பவர் மனதில் விஷத்தை விதைப்பார்களே... அதற்கு ஒப்பானதாக இருக்கிறதே, கிறிஸ்துவ மக்களிடையே நீங்கள் பேசிய சாத்தான் பேச்சு. கிறிஸ்துவ மக்களிடம், அவர்கள் பின்பற்றுகிற மதம், வைத்திருக்கிற வேதத்தின் உயர்தனி பெருமைகள் குறித்து பேசி, அவர்களை மேலதிக விசுவாசிகளாக மாற்றி அனுப்புவதுதானே ஒரு நல்ல ஊழியக்காரரின் வேலை? மாறாக, அவர்கள் மனதில் பிற மதத்தினர் மீது வெறுப்பையும், சாத்தானை வணங்குகிறவர்கள் என்கிற இழிவான சிந்தனையையும் விதைத்து அனுப்புவது உண்மையான ஊழியக்காரர் செய்கிற செயல்தானா? உங்களைப் போன்ற குழப்பவாத பிரசங்கிகளின் பேச்சுக்களை கேட்கும் போது, ஈரோட்டுக்காரர் சொன்ன ‘மதம் மனிதனை மிருகமாக்கும்...’ என்கிற வார்த்தை சத்தியம்தானோ என்றல்லவா நினைக்கத் தோன்றுகிறது?

னியாகிலும், சமூக ஒற்றுமைக்காக, மத நல்லிணக்கத்துக்காக, மனிதர்களின் மன அமைதிக்காக பேசுங்கள். பிரசங்கம் செய்யுங்கள். இயேசு கிறிஸ்து வழிகாட்டிய படி, அனைவரையும் நேசியுங்கள். நேசிக்க கற்றுக் கொடுங்கள். வன்முறைகளை தூண்டும் விதமாக பேசுகிற, போலியான கள்ளப் பிரசங்கிகளை பற்றியும் இயேசு கிறிஸ்து தெளிவாகவே அடையாளம் காட்டிச் சென்றிருக்கிறார் (மத்தேயு 7:22, 23). நீங்கள் மிக நன்றாகவே தெரிந்து வைத்திருப்பீர்கள். இருந்தாலும், அதை நினைவூட்டாமல் முடித்தால் இந்த கட்டுரை முழுமையானதாக இராது. என்பதால்....


‘‘அந்நாளில் அநேகர் என்னை நோக்கி... கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று இயேசு அவர்களுக்குச் சொல்லுவார்...’’

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் - 

12 கருத்துகள்:

  1. அருமையான பதிவு!
    மேலும் மத மாற்றம் பற்றிய கருத்து மிகவும் அற்புதம்! வாழ்த்துக்கள் பல!

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு! மத மாற்றம் பற்றிய கருத்து மிகவும் அற்புதம்

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு!
    மேலும் மத மாற்றம் பற்றிய கருத்து மிகவும் அற்புதம்! வாழ்த்துக்கள் பல!

    பதிலளிநீக்கு
  4. மோகன் சி லாசரஸின் நடவடிக்கைக்கு கன்னியமான விமர்சனம். பிரசங்கம் செய்பவருக்கே அருமையான பிரசங்கமாய் இருந்தது இந்தக் கட்டுரை.இந்து மத வெறியர்களிடமும், ர்ப்பாளர்களிடமும் சிக்கி படாதபாடு படுகிறது இந்து மதம்.

    பதிலளிநீக்கு
  5. மோகன் சி லாசரஸின் நடவடிக்கைக்கு கன்னியமான விமர்சனம். பிரசங்கம் செய்பவருக்கே அருமையான பிரசங்கமாய் இருந்தது இந்தக் கட்டுரை.இந்து மத வெறியர்களிடமும், ர்ப்பாளர்களிடமும் சிக்கி படாதபாடு படுகிறது இந்து மதம்.

    பதிலளிநீக்கு
  6. Pentecost preachers bring a bad name to Christian faith. They are simply religious terrorists.

    பதிலளிநீக்கு
  7. மத பயங்கரவாதம் ஆயுதங்களுடன்தான் வரவேண்டும் என்பதில்லை. பிரசங்கிகளின் பேச்சு மூலமும் வரலாம் என்பதை ஏசுவின் பிள்ளைக்கே எடுத்துச் சொல்லிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  8. எனக்கான எல்லா முடிவுகளையும் நான் எடுத்துக்கொள்ளலாம் ஆனால் அடுத்தவர்களின் அடுத்த அண்டை வீட்டினர் செய்யவேண்டியவைகளை நான் முடிவு எடுக்க முடியாது.அவர்களை நான் விமர்சிக்கவும் கூடாது.எனது வீட்டை மட்டும் நான் பார்த்துக்கொண்டால் போதுமே......

    பதிலளிநீக்கு
  9. சங்கரசுப்பிரமணியன், கோவைபுதூர்8 அக்டோபர், 2018 அன்று PM 2:51

    கிறிஸ்துவ பாதிரியார்கள் மட்டுமல்ல,முஸ்லிம் பிரசங்கிகளும் தங்கள் சிறப்புப் பிரார்த்தனைக் கூட்டங்களில் பிற மதவெறுப்பை அடிப்படையாகக் கொண்டே பிரசங்கம் செய்கிறார்கள். வெறுப்பை தூண்டி விட்டு, மதக் கலவரங்களுக்கு காரணமாக மாறும் மத போதகர்களுக்கு இந்தக் கட்டுரை சாட்டையடி. இந்தக் கட்டுரையைப் படித்தப் பிறகாவது அவர்கள் திருந்துவார்களா?

    பதிலளிநீக்கு
  10. குர் ஆன் வசனத்துடன் ஆரம்பித்து பைபிள் வசனங்கள் கொண்டு விளக்கி இருசமூகங்களுக்கிடையே ஒற்றுமை ஏற்படுத்தும் தங்கள் கட்டுரை அருமை. என்.எஸ் . கிருஷ்ணன் எழுத்தாளர் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு பேசியது, இன்று எழுத்தாளர்கள் எழுதுகோலில் எப்படிப் பட்ட மையை கொண்டு எழுதுகிறார்கள் தெரியுமா? சிலர் பெருமை யும் பலர் தற் பெருமையும் | , மற்றும் சிலர் பொறாமையும் ' பழைமை தொட்டு எழுதுகின்றனர். இவை தவிர கயமை, பொய்ம்மை, மடமை, வேற்றுமை தீமை தரக்கூடிய மைகளை தவிர்க்க வேண்டும் என்றார், மேலும் நன்மை தரக் கூடிய நேர்மை, புதுமை, செம்மை, உண்மை போன்ற மைகளால் எழுதக் கூறினார். இக் கட்டுரை கலைவானர் என்.எஸ்.கே யின் கூற்றுப்படி நன்மை கள் கொண்டு எழுதப்பட்டுள்ளது. வாழ்த்துகள் தொடரட்டும் சீரிய எழுத்துப் பணி |

    பதிலளிநீக்கு
  11. நல்ல கட்டுரை. மிக நடுநிலைமையோடு இருந்து பிரச்னை அலசப்பட்டிருக்கிறது. வழிநடத்துபவர்கள் ஒழுங்காக இருந்தால் தான், உலகம் அமைதியாக இருக்கும். இன்றைக்கு இந்தியா மட்டுமல்ல, உலகமெங்கும் மதக் கலவரங்கள் அதிகரித்து, மக்கள் நிம்மதி இழந்து தவித்துக் கொண்டிருக்கிற நேரத்தில் மிகச் சரியான டைமிங் மேட்டர். மத விற்பன்னர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று வேதங்களை மேற்கோள் காட்டி கூறியிருப்பது இன்னும் சிறப்பு. வாழ்த்துகள் சகோ.

    பதிலளிநீக்கு
  12. தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் இணைக்கலாமே http://tamilblogs.in

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...