வியாழன், 27 ஏப்ரல், 2017

மார்க்சிஸ்ட் சகாவும், மஞ்சு வாரியாரும்...!

ரசு என்பது ஒரு அடக்குமுறை இயந்திரம் - இடதுசாரி தத்துவயியல் மரபின் அடிநாதங்களுள் மேற்படி ஐந்து வார்த்தை சொற்றொடரும் அடக்கம். வேடிக்கை என்னவென்றால்... இடதுசாரி அமைப்பே ஆட்சி பீடத்தில் அமர நேரிட்டாலும் கூட... அரசு என்பது ஒரு அடக்குமுறை இயந்திரமே!


கூகுளை தட்டி உலகளாவிய உதாரணம் தேட அவசியமே இல்லை. மேலே காவியும், கீழே பச்சையும், நடுவில் கொஞ்சம் வெள்ளையும் கொண்ட நம்ம தேசத்திலேயே இருக்கின்றன எடுத்துக்காட்டுகள். மேற்கு வங்கத்தில் சிங்கூரும், கேரளத்தில் முல்லப் பெரியாறும் போதாதா? உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் மீது அரசு இயந்திரம் என்னவிதமான பேரன்பு பூண்டிருந்தது என்பதறிய?

தெல்லாம் ஓல்ட் சகாவு. லேட்டஸ்ட் வெர்ஷன் ஏதானு உண்டு... என்று கேட்கிற யூத் நீங்களென்றால்... எம்.எம்.மணி சாரை நாம் உதாரணம் காட்டலாம். மணி சாரைப் பற்றி சின்னதாக ஒரு குறிப்பு வரையலாமா?


முண்டக்கல் மாதவன் மணி என்ற நீ....ண்ட பெயரின் சுருக்க்க்க்க உச்சரிப்பே எம்.எம்.மணி. மார்க்சிஸ்ட் கட்சிக்காரர். இடுக்கி மாவட்டச் செயலாளராக இருந்தவர். இப்போது, மாநில செயற்குழு உறுப்பினர். உடும்பஞ்சோலா தொகுதியில் ஜெயித்து,  ‘கரண்ட்’ பினராய் விஜயன் அரசாங்கத்தில் கரண்ட் வாரிய அமைச்சர். மின்துறை இவரிடம் இருப்பது மிகப் பொருத்தம். சார் பேசினால் ஷாக்கடிக்கும்.

ச்சுதானந்தன் முதலமைச்சராக இருந்தபோது, மாநிலச் செயலாளராக இருந்த பினராய் விஜயனோடு நடந்த உள்குத்து அக்கப்போர்கள் உலகப் பிரசித்தம். உள்ளடி வேலைகளால் திண்டாடிப் போன அச்சுவின் ஆதரவாளர் டி.பி.சந்திரசேகரன், அதுவரை வகித்து வந்த பதவிகளை எடுத்து கட்சி ஆபீஸ் மேசையில் வைத்து, ஒரு வீர வணக்கம் போட்டு விட்டு வெளியேறினார். புரட்சிகர மார்க்சிஸ்ட் என்று இயக்கம் ஆரம்பித்தார். வளர்ந்தார். பாதியிலேயே படுகொலை செய்யப்பட்டு, கண்ணீர் அஞ்சலி போஸ்டரானார்.

துவல்ல மேட்டர். இந்தப் படுகொலை நடந்த சில காலத்துக்குப் பிறகு தொடுபுழாவில் (என்று நினைக்கிறேன்) நடந்த மார்க்சிஸ்ட் கட்சிக் கூட்டத்தில் மைக்கைப் பிடித்தார் மணி. ‘‘கட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அரசியல் எதிரிகளை அப்படி கையாண்ட வரலாறு நமது கட்சிக்கு உண்டு. கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள் பட்டியலை தயார் செய்து கதையை முடித்திருக்கிறோம்...’’ என்று பேச, கேரள சேட்டன் + சேச்சிமார்கள் கொலைபயத்தில் ஜெர்க் ஆகி விட்டார்கள்.


ப்படி தன்னகத்தே பல ‘வரலாறு’கள் வைத்திருக்கும் மணி சார், மிக சமீபத்தில் அடிமாலி வந்திருந்தார். மூணாறு பக்கம் இப்போது ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதைப் பற்றி விமர்சித்துப் பேசியவர், அப்படியே டிராக் மாறி, மூணாறு தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளர்களை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ‘பெண்கள் ஒற்றுமை (Pombilai Orumai)’ அமைப்பின் மீது திடீரெனப் பாய்ந்தார்.

‘‘அந்தப் பெண்களைப் பற்றி எனக்குத் தெரியாதாக்கும்? 40 நாள் போராட்டத்தின் போது, யார் யார்... யார் யாரோட குடியும், கும்மாளமுமா என்னென்ன ஆட்டம் போட்டாங்கன்னு பட்டியல் போடட்டுமா...?’’ என்று பேச... பற்றிக் கொண்டது தீப்பொறி.


கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மலையும், மலை சார்ந்த மூணாறுக்கு நிறைய சம்மர் டூர் போயிருப்பீர்கள். மலைக்கு குளிராமல் இருக்க போர்த்தி விட்டது போல, பச்சைக் கம்பளமாக பரந்து படர்ந்திருக்கிற தேயிலைத் தோட்டங்களின் அழகில் கிறங்கிக் கிறுகிறுத்து போட்டோ + செல்பி எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருப்பீர்கள் இல்லையா? அந்த அழகுக்குப் பின்புலத்தில் இருக்கிறது ரத்தமும் + வியர்வையும் கலந்ததொரு கடின உழைப்பு. தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இருந்து சென்ற அப்பாவி மக்கள், தங்கள் உயிரை உரமாகப் போட்டு அந்த பச்சைக் கம்பளங்களை மலைக்கு மேல் விரித்திருக்கிறார்கள் என்கிற வேதனை வரலாறு... இன்றைக்கு மது பாட்டில்களை மலைச்சாலையில் வீசியெறிந்து கொண்டாடி திரும்பும் இளைய தலைமுறைக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.


ட்டைப்பூச்சிகளுக்கும், தேயிலைத் தோட்ட நிர்வாகங்களுக்கும் அதிக வித்தியாசம் இராது. ரத்தம் உறிஞ்சுவது பொது குணம். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து கிள்ளி இங்கு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் தமிழர்கள். நியாயமான கூலி உயர்வு கோரி 2015ல் சுமாராக 40 நாட்களுக்கு இவர்கள் நடத்திய அறப்போராட்டம்... ஒட்டுமொத்த கேரளத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தது. கேரளத்தின் சகல கட்சிகளும் சேர்ந்து அந்தப் போராட்டத்தை முறியடிக்க முன்வந்தன. ஆனால், முடியவில்லை. போராட்டத்தின் பெரு வெற்றி, ஒற்றுமையின் வலிமையை அந்தப் பெண்களுக்குப் புரிய வைத்தது. தங்கள் அடுத்தடுத்த இலக்குகளை எட்டுவதற்காக அவர்கள் இணைந்து உருவாக்கிய அமைப்பு - பெண்கள் ஒற்றுமை.

ழைக்கும் தொழிலாளர்களின் வெற்றியாகப் பார்க்காமல், அந்தப் போராட்டத்தை தமிழ் சமூகத்தின் வெற்றியாக சில இனவெறி நெஞ்சங்கள் பார்த்தன. சமயம் கிடைக்கும் போது விஷம் கக்கக் காத்திருந்தன. 2015ல் பட்ட காயத்தின் வலி, 2017ல் மணியின் வாயில் இருந்து, ‘‘அந்தப் பெண்கள் யார் யாரோட குடியும், கும்மாளமுமா என்னென்ன ஆட்டம் போட்டாங்கன்னு சொல்லட்டுமா...?’’ என்கிற வக்கிர வார்த்தைகளாக வடிவம் பெற்று வந்து விழுந்தன.

ழைப்பாளர்களுக்கான, உழைக்கும் தொழிலாளர்களுக்கானதாக பிம்பப்படுத்தப்படும் ஒரு கட்சியின் மிக முக்கியப் பிரமுகர் / மாநில அமைச்சராக இருப்பவர், தேயிலைக் கொழுந்து கிள்ளும் சாதாரணப் பெண்களை நோக்கி இப்படி விஷம் தோய்ந்த வார்த்தைகளை வீசியது ஒருபுறம். அங்குள்ள மார்க்சிய சித்தாந்திகளிடம் இருந்து இதற்கு பெரிதாக எந்த எதிர்வினையோ, கண்டன குரலோ கிளம்பாததுதான் வேதனையின் உச்சக்கட்டம்.

ரிகிற நெருப்பில் பெட்ரோல் ஊற்றுவதற்கு இணையானதொரு கருத்து தெரிவித்திருக்கிறார் மாநில முதல்வரும், கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் மிக மூத்த நிர்வாகியுமான பினராய் விஜயன். ‘‘மணியின் பேச்சை ஊடகங்கள் பூதாகரமாக்கி விட்டன. மணி பேசிய இடுக்கி மாவட்ட உள்ளூர் மலையாள பாஷை, அவரது கருத்தை மக்கள் தவறாக புரிந்து கொள்ள காரணமாக அமைந்து விட்டது... (‘‘Mani's remarks regarding women were distorted and magnified by the media. Mani's Idukki dialect and colloquial use of Malayalam also contributed to people misinterpreting his words...’’) என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டியிருக்கிறார். உழைப்பவர்களுக்கான குரலொன்று, அரசு என்ற அமைப்பிற்குள் பொருந்திக் கொண்டப் பிறகு அடக்குமுறை இயந்திரமாக தன்னைத்தானே தகவமைத்துக் கொள்வதைக் கவனித்தீர்களா?


‘உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்....’ என்று கொள்கை முழக்கம் எழுப்புகிற அந்தக் கட்சியின் தேசிய தலைவர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், சீதாராம் யெச்சூரி... என்று ஒருத்தரும் வாய் திறந்தார்களில்லை. மாறாக, ‘அவர் அப்படியெல்லாம் பேசவே இல்லை...’ என்று புது கதை தயாரிக்கிறார்கள். மணியின் அடிமாலி பேச்சு நீங்கள் குழாயில் (You Tube!!!!???) இருக்கிறது. பார்த்து உறுதி செய்து கொள்ளலாம். நம்மூர் பக்கம் உள்ள தோழர்கள், ‘அவர் தமிழர். நெல்லை மண்ணில் பிறந்தவர். அவரை தப்பா பேசக்கூடாது தோழர்...’ என்கிறார்கள். விக்கியில் பார்த்த போது, அவர் ஜனிச்ச ஸ்தலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கிடங்கூர் கிராமம் என்று வருகிறது. ஒருவேளை முன்னோர்கள் நெல்லையாக இருக்கலாம். இருந்து விட்டு போகட்டும். நீங்கள் நாகர்கோவிலுக்கு அந்தப்பக்கம் இருக்கிற நாஞ்சில் காரர்களை கவனித்துப் பாருங்களேன்... நிறையப் பேரின் இனம் தமிழாகவும், மனம் மலையாளமாகவும் இருக்கக் காண்பீர்கள்.

ழைப்பாளர்களின் ஏகபோக குரலாக தன்னை பிரதிநிதித்துவப்படுத்துகிற கட்சி வாய்மூடி மவுனித்திருந்தாலும், அதே மண்ணில் இருந்து ஒரு பெண், சினிமா கலைஞர், துணிச்சலாக எதிர்ப்புக் குரலை பதிவு செய்திருக்கிறார்.

ணியின் கருத்துக்கு தனது காட்டமான கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார் மலையாள நடிகை மஞ்சு வாரியார். ‘‘சுயமரியாதையை மீட்டெடுத்து தங்கள் சொந்தக் கால்களில் நிற்க முயற்சிக்கும் அனைத்து பெண்களையும் அமைச்சர் மணி தனது பேச்சு மூலம் அவமானப்படுத்திவிட்டார். பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் இப்படி பொறுப்பற்று பேசியிருப்பது வேதனையாக இருக்கிறது. பெண்களின் மரியாதை பற்றி சமுதாயத்தில் உரக்க பேசவேண்டிய பொறுப்பு அமைச்சருக்கு உள்ளது. அவர் அதை உணர்ந்து செயல்பட வேண்டும். மன்னிப்பு என்கிற வெற்று வார்த்தைகளை பதிவு செய்யாமல், இதுபோன்ற பேச்சுகள் இனிவரும் காலங்களில் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்...’’ என்று சூடு வைத்திருக்கிறார் மஞ்சு.


மார்க்சிய தத்துவங்கள் மீது இன்றைக்கும் இந்த உலகம் தீரா அபிமானம் கொண்டிருக்கிறது. பொதுவுடமை கருத்துகளுக்கான தேவையை முன்னெப்போதையும் விட இந்த உலகம் இப்போது அதிகம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. எனும்போது, பொதுவுடமை சிந்தாந்தக் காரர்களின் பொறுப்பு பல மடங்கு அதிகரித்திருக்க வேண்டாமா? மார்க்ஸூம், ஏங்கல்ஸூம் படிப்பித்துத் தந்த பாடங்களை, மஞ்சு வாரியார் வந்தா ரிவிஷன் செய்யவேண்டும்??!!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் - 

7 கருத்துகள்:

  1. மிக அருமையான பதிவு சார்.பல விசயங்களை தெளிவு படுத்தி உள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. தில்லைநாதன், கழுகுமலை28 ஏப்ரல், 2017 அன்று AM 12:03

    படு சீரியஸ் கட்டுரையை இவ்வளவு ஜாலியாக கொடுத்திருக்கிறீர்கள், படி்க்க இன்ட்ரஸ்டிங்காக இருக்கிறது. நீங்கள் சொல்ல வந்த விஷயமும் முழுவதுமாக புரிகிறது. எழுத்து பணி தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. லோகல் தாதா போல் நடந்து கொள்வது இடதுசாரிக்கு அழகா என்பதை அவர்களே சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் :)

    பதிலளிநீக்கு
  4. இடதுசாரிகள் கொலை கொள்ளைகளுக்கு அஞ்சாதவர்கள் என்பது தெரிந்த விஷயம்தானே! அதனால்தான் மக்கள் அவர்களை நிராகரித்து வருகிறார்கள்!

    பதிலளிநீக்கு
  5. அரசியலுக்கு ரவுடிப்பயக மட்டுமே வரமுடியும்போல

    பதிலளிநீக்கு

  6. மார்க்சிய தத்துவங்கள் மீது இன்றைக்கும் இந்த உலகம் தீரா அபிமானம் கொண்டிருக்கிறது. பொதுவுடமை கருத்துகளுக்கான தேவையை முன்னெப்போதையும் விட இந்த உலகம் இப்போது அதிகம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. எனும்போது, பொதுவுடமை சிந்தாந்தக் காரர்களின் பொறுப்பு பல மடங்கு அதிகரித்திருக்க வேண்டாமா? மார்க்ஸூம், ஏங்கல்ஸூம் படிப்பித்துத் தந்த பாடங்களை, மஞ்சு வாரியார் வந்தா ரிவிஷன் செய்யவேண்டும்
    மிகவும் அருமை

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...