வெள்ளி, 21 ஏப்ரல், 2017

கட்டப்பாவுக்கு வந்த கன்னட சோதனை!

ரு நடிகரை கண்டித்து மாநிலம் முழுக்க பந்த் அறிவிப்பு. எனக்குத் தெரிந்து, ஒரு நடிகருக்காக, அவர் பத்தாண்டுகளுக்கு முன் பேசிய பேச்சுக்காக மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படுவது இதுவே முதல்முறை. அந்த வகையில் ரஜினிகாந்த், கமலஹாசன், இந்தி(ய) திரையுலகில் அமிதாப் பச்சன், ஷாருக் + சல்மான் + அமீர் கான்கள்... ஏன், உலகளவில் அர்னால்ட் ஸ்வார்ஸ்நெகர், சில்வஸ்டர் ஸ்டாலன், ஜாக்கி சான் என்று எந்தவொரு நடிகரும் அடையாத அதிகபட்ச புகழை அடைந்திருக்கிறார் தமிழ் சினிமா நடிகர் சத்யராஜ். வாட்டாளுக்கு நன்றிகள்!


ழை எப்போ பெய்யும், குடிநீர் ஒழுங்காக கிடைக்குமா, பெட்ரோல் விலை குறையுமா... கேள்விகளையெல்லாம் புறந்தள்ளி, கட்டப்பா ஏன் குத்தினார் என்ற ஒற்றைக் கேள்விக்கான பதிலறிய காத்திருந்தது தேசம். சாதாரணக் காத்திருப்பு அல்ல - ஏறத்தாழ இரண்டாண்டு காத்திருப்பு. விடை ஏப்ரல் 28ம் தேதி தெரியும் என்றறிந்ததும், சம்மர் ஸ்பெஷல் ரயில்களுக்கான இருக்கைகளையும் விட அதிவேகத்தில், பாகுபலி  2ம் பாகத்துக்கான இருக்கைகள் முன்பதிவாகி முடிந்தன. ஏப்ரல் 28ம் தேதி இந்த நேரத்துக்கெல்லாம், பாகுபலியின் மர்ம மரணத்துக்கான துப்புத் துலங்கியிருக்கும். கர்நாடக ரசிகர்கள்தான் பாவம். அவர்கள் பாகுபலி கொலைக்கான முதல் தகவலறிக்கையை, எஸ்டிடி கால் போட்டு பக்கத்து மாநிலத்து நண்பர்களிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும்.

ன்? அங்கு பாகுபலி - 2 (Bahubali 2 - The Conclusion) ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கிறது. யார் விதித்தது? மாநில அரசா, மத்திய அரசா, உள்ளாட்சி அமைப்புகளா...? இல்லை. இவையெல்லாவற்றையும் விட அதிக அதிகாரம் கொண்டவராக (தன்னைத் தானே கருதிக் கொண்டிருக்கிற) அறியப்படுகிற கன்னட சுனாமி வாட்டாள் நாகராஜ் தடை விதித்திருக்கிறார்.


வாட்டாள் தடை விதித்திருக்கிறார் என்றால்... காரணம் இல்லாமல் இருக்காது. இல்லையா? சரி. என்ன காரணமாம்? காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ் நடிகர் சத்யராஜ், கன்னடர்கள் + காவிரி + கர்நாடகாவை அவமதிப்பாக பேசிவிட்டாராம். அதற்காக சத்யராஜ் மன்னிப்புக் கேட்டால் மட்டுமே - அதுவும் பெங்களூருக்கு வந்து - படம் ரிலீஸ் ஆகும். அல்லாதபட்சத்தில், ராணுவம் வந்தாலும் படத்தை ஓட்ட முடியாது. மீறி ரிலீஸ் செய்தால், தியேட்டர்களில் ஏற்படுகிற சேதத்துக்கு நாங்கள் பொறுப்பில்லை... என்று பணிவன்புடன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

செய்தியைப் படித்ததும், தமிழ் சினிமா ரசிகர்கள் மண்டை காய்ந்து போனார்கள். சத்யராஜ் எப்போது கன்னட அன்பர்களை தவறாகப் பேசினார்? மூளைக்குள் இருக்கிற மெமரி ஸ்லாட்களை ஒவ்வொன்றாக திறந்து பார்த்தும் உள்ளே அப்படி எதுவும் புலப்படாததால், கூகுளை சரணடைந்தார்கள். உண்மைதான். சத்யராஜ் பேசியிருக்கிறார் தான். ஆனால், அன்பர்களே அது... போனவாரம், போனமாதம், போனவருடம் இல்லை. இன்றில் இருந்து சுமாராக பத்து ஆண்டுகளுக்கு முன்பாக பேசிய பேச்சு. காவிரி பிரச்னை உச்சக்கட்டத்தில் இருந்த போது, பெங்களூரில் வன்முறை வெடித்து தமிழர்கள் தாக்கப்பட்ட போது, சென்னை, சேப்பாக்கத்தில் தமிழ் சினிமா காரர்கள் ஒரு போராட்டம் நடத்தினார்கள். 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்தது போராட்டம். அதில் ரஜினிகாந்த், கமலஹாசன் போன்றவர்கள் பங்கேற்றுப் பேசியிருக்கிறார்கள். அதில், சத்யராஜூம் பேசியிருக்கிறார்.

முதலில் என்ன பேசினார் என்று பார்த்து விடலாம்...

‘‘நடிக‌‌ர்க‌ள் த‌ங்க‌ளி‌ன் த‌னி‌ப்ப‌ட்ட பெருமையை‌ப் பே‌சி கைத‌ட்ட‌ல் வா‌ங்குவத‌ற்கான இடம‌ல்ல இது. ஒ‌ட்டுமொ‌த்த‌த் த‌மிழ‌ர்க‌ளி‌ன் உ‌ரிமை‌க்காக குர‌ல் கொடு‌க்க‌வே நா‌ம் கூடி‌யு‌ள்ளோ‌ம். நா‌ன் த‌மிழ‌ர்க‌ள் நசு‌க்க‌ப்படுவதை‌ப் ப‌‌ற்‌றி ம‌ட்டுமே பேசப் போகிறேன்.

த‌மிழ‌ர்க‌ள் மர‌ம்போல உ‌ள்ளோ‌ம். மர‌ம் எ‌ன்றா‌ல் எ‌ப்படி வே‌ண்டுமானாலு‌ம் பய‌ன்படு‌த்துவா‌ர்க‌ள். இதனா‌ல் நா‌ம் உண‌ர்‌ச்‌சிய‌ற்று இரு‌க்க‌க் கூடாது. நா‌ம் தா‌க்க‌ப்ப‌ட்டா‌ல் த‌க்க ப‌திலடி கொடு‌க்க வே‌ண்டு‌ம். 

ஒகேன‌க்க‌ல் த‌மிழக எ‌ல்லை‌க்கு‌ள் உ‌ள்ளது. நமது எ‌ல்லை‌க்கு‌ள் நம‌க்கு வழ‌ங்க‌ப்ப‌ட்ட ‌நீரை நமது குடி‌நீரு‌க்காக‌ப் பய‌ன்படு‌த்துவதை யா‌ர் தடு‌ப்பது? இதை‌த் தடு‌ப்பத‌ற்கு‌க் க‌ன்னட‌ர்க‌ள் யா‌ர்? 

க‌ண்‌ணி‌‌ற்கு‌க் க‌ண் எ‌ன்று போனா‌ல் உல‌கி‌ல் வாழு‌ம் 600 கோடி பேரு‌ம் க‌ண்‌ணை இழ‌ந்து குருடராக‌த்தா‌ன் வா‌ழ்வா‌ர்க‌ள் எ‌ன்று கா‌ந்‌‌தி சொ‌ன்னா‌ர். ப‌‌‌ழி‌க்குப் ப‌‌ழி வா‌ங்குவதை தடு‌க்கு‌ம் அ‌ந்த வா‌க்கு, இன்றைக்கு கதை‌க்கு உதவாது. இப்போது‌ அதை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றினா‌ல் த‌மிழ‌ர்க‌ள் 10 கோடி பேரை‌த் த‌விர ‌மீதமு‌ள்ள 590 கோடி பேரு‌ம் பா‌ர்வையுட‌ன் இரு‌ப்பா‌ர்க‌ள்.

த‌மிழ‌ர்க‌ள் இ‌ப்படியே இரு‌ந்தா‌ல் ந‌மது முது‌கி‌ன் ‌மீது யா‌ர் வே‌ண்டுமானாலு‌ம் ஏ‌றி‌க் கொ‌ள்வா‌ர்க‌ள். அத‌ற்கு நா‌ம் அனும‌தி‌க்க‌க் கூடாது. 

ஒகேன‌க்க‌ல், மு‌ல்லை‌ப் பெ‌ரியாறு, த‌மி‌ழீழ‌ம் என எ‌ல்லா ‌விஷய‌ங்க‌ளிலு‌ம் த‌மிழ‌ர்க‌ளி‌ன் உ‌ரிமைக‌ள் ப‌றி‌க்க‌ப்படு‌கி‌ன்றது. ஈழ‌த்‌தி‌ல் வ‌சி‌ப்பவ‌ர்க‌ள் நமது சகோதர‌ர்க‌ள் இ‌ல்லையா? அவ‌ர்க‌ள் நசு‌க்க‌ப்படு‌ம் ‌நிலை‌யி‌ல் இல‌ங்கை‌க்கு ஆயுத உத‌வி செ‌ய்யலாமா? கூடாது. கூடவே கூடாது!

நா‌ங்க‌ள் ஆயுத‌ம் எடு‌‌க்க ‌விரு‌‌ம்ப‌வி‌ல்லை. ‌சில க‌ன்னட வெ‌றிய‌ர்க‌ள் எ‌ங்களை அத‌ற்கு‌த் தூ‌ண்டு‌கிறா‌ர்க‌ள். ந‌ம்மைச் ‌சீ‌ண்டினா‌ல் நா‌‌ம் பொறுமையுட‌ன் இரு‌க்க‌க் கூடாது. த‌க்க ப‌திலடி கொடு‌க்க வே‌ண்டு‌ம்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று எத்தனை காலத்துக்கு சொல்லிக் கொண்டிருக்க முடியும்? இங்கே வந்து பிழைப்பவர்கள் வாலை நீட்டினால் ஒட்ட நறுக்கவும் தெரியணும். மும்பையிலே பால்தாக்கரே என்பவன் தமிழனை தாக்கினான். இலங்கையிலே தமிழனை சுட்டுக் கொல்கிறான். இப்போ கர்நாடகத்திலே அடிக்கிறான். உரிமையோடு கேட்பதற்கு என்ன பயம்? எங்களுக்கு உரிமையுள்ள தண்ணீரை எங்க இடத்திலே எடுத்துக் கொள்வதை நீ எப்படி தடுக்க முடியும்?’’

- இது சத்யராஜ் பேசியதன் சுருக்கப்பட்ட வடிவம். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவர் பேசும் போது, அவரையும் மீறி சில அதிகப்படி வார்த்தைகள் வந்து விழுந்தது உண்மையே. மேடையில் இருந்தவர்களை மட்டுமல்லாது, டிவியில் நேரடியாக பார்த்துக் கொண்டிருந்த பலரையும் அவரது பேச்சு திடுக்கிட்டு உட்கார வைத்தது உண்மைதான்.



ரி. தாத்தா காலத்தில் நடந்த மேட்டருக்கு பேரன் வந்து பழிவாங்குகிற பழையகால சினிமா கதை போல, 2008 ஏப்ரலில் நடந்த மேட்டருக்கு, 2017 ஏப்ரலில் வாட்டாள் அண்ணன் கொதித்தெழுவதன் பின்னணியில் இருக்கிற மர்மம் நிஜமாகவே புரிபடவில்லை. அப்பல்லோ மர்மத்தையும் விட இது ஒரு படி மேலே. 2008ல் சத்யராஜ் பேசி முடித்தப் பிறகு அவர் நடித்த பல படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கின்றன. பெங்களூரில் ஓடி வசூல் எடுத்திருக்கின்றன. அவ்வளவு ஏன்... 2015, ஜூலை 10ம் தேதி பெங்களூர் நகரத் தியேட்டர்களின் பாகுபலி முதல் பாகம் ரிலீஸ் ஆகி கன்னட ரசிகர்களை கட்டிப் போட்டிருந்தது. அந்தப் படத்தில் கட்டப்பா வேடத்தில் வந்தவர் சத்யராஜ் என்கிற தகவல் வாட்டாளுக்கு தெரியாதா, யாரும் சொல்லவில்லையா அல்லது அந்த நேரம் வரைக்கும் சத்யராஜின் 2008 சேப்பாக்கம் உரை அவரது கவனத்துக்கு போயிருக்க வில்லையா...? அப்போதெல்லாம் ஏன் எந்தப் போராட்டமும் அறிவிக்கவில்லை? சத்யராஜை கண்டிக்கவில்லை? பந்த் அழைப்பு கொடுக்கவில்லை? வாட்டாள்தான் விளக்கவேண்டும்.
(பாகுபலி சர்ச்சைக்கு விளக்கம் அளித்து நடிகர் சத்யராஜ் பேசியுள்ள விரிவான வீடியோ உரை இணைப்பு கீழே இருக்கிறது).



கவல் தொழில்நுட்ப அறிவில் பெங்களூரு உச்சத்தில் இருப்பதாக ஒரு கருத்து இருக்கிறது. அது உண்மையா என ஒன்றுக்கு பலமுறை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது. இன்றைய ஃபேஸ்புக், வாட்ஸ்அப் காலத்திலும் கூட, 2008ல் பேசிய பேச்சு பத்து வருடம் கழித்துத்தான் ஒரு மனிதரை சென்று சேர்கிறது என்றால்... கர்நாடகம், கற்காலத்தை கடந்து வரவில்லையோ என்கிற கேள்வி இயல்பாகவே எழுந்து விடுமில்லையா?

ந்த வகையில் தமிழகமெல்லாம் டாப் கியரில் போய்க் கொண்டிருப்பது சத்தியம். அரசு ஆஸ்பத்திரியில் ஆறு மாதமாக கோமாவில் இருப்பவரை எழுப்பி உட்கார வைத்தால்... உட்கார்ந்ததும் கேட்கிற கேள்வி, ‘‘எடப்பாடி, ஓபிஎஸ் டீம் மெர்ஜ் ஆகிடுச்சா சார்? எல திரும்ப கெடச்சிருச்சா...?’’ என்பதாகத்தான் இருக்கும். அந்தளவுக்கு நியூசில் அப்டேட்டாக தமிழகம் இருக்கிறது. உள்ளபடியே, வாட்டாளுக்கு சத்யராஜ் பேச்சு இப்போதுதான் போய்ச் சேர்ந்திருக்கிறது என்று வரும் தகவல்கள்... தொழில்நுட்ப நகரின் பெயருக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை.

ன்றாகப் படித்த கன்னடத்து இளைஞர்கள், வாட்டாளின் வாட்ஸ்அப் நம்பரை கேட்டுப் பெற்று, ஏதாவது வாட்ஸ்அப் செய்தி குரூப்பில் உடனடியாக இணைத்து விட்டால் புண்ணியம். நாட்டில் நடக்கிற செய்திகளை இனியாகிலும் அவர் உடனுக்குடன் அறிந்து கொள்ள, அவ்வப்போதே போராட்டம் செய்ய வசதியாக இருக்கும்.


ண்மையில், ஆயிரக்கணக்கான கோடி பணம் புழங்குகிற பாகுபலி டீமிடம் இருந்து என்னவிதமான எதிர்பார்ப்புடன் வாட்டாள் இந்தப் பிரச்னையை கிளப்பியிருக்கிறார் என்று தெரியவில்லை. அவரை சமாதானப்படுத்தி, வழிக்குக் கொண்டு வருகிற ‘எலும்புத்துண்டு வித்தை’ ராஜமவுலிக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். என்பதால், ஏப்ரல் 28ல் பாகுபலி - 2 ரிலீஸ் ஆவதில் பெரிய சிக்கல்கள் இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.

ஆனால்,  நண்பர்களே.... ஒரே ஒரு சிறிய ஒப்பீடுடன் இந்த கட்டுரையை முடிவுக்குக் கொண்டு வந்து விடலாம் என விரும்புகிறேன்.


ன்றைய தேதியில் தமிழகத்திலும் போராட்டங்கள் நடக்கின்றன. போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றன. என்ன காரணங்களுக்காக இங்கு போராட்டங்கள் நடக்கின்றன. பாருங்கள்... விவசாயிகள் பிரச்னை, அணு உலை, ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, மீனவர் பிரச்னை, கெய்ல் எரிவாயு, இனயம் செயற்கைத் துறைமுகம், மணல் கொள்ளை, டாஸ்மாக் மதுக்கடை எதிர்ப்பு... என தமிழகத்தின் போராட்டம் சமூக அக்கறையை குவிமையமாகக் கொண்டு ஒரு யுகப்புரட்சிக்கான எழுச்சியுடன் நடந்து கொண்டிருக்கிறது.


ல்லைக்கு அப்பால், ஒரு சினிமா நடிகர் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று (அதுவும் பத்தாண்டுகளுக்கு முன்பு பேசிய பேச்சுக்காக) பந்த் நடந்த அழைப்பு விடுக்கப்படுகிறது என்றால்... கலாச்சாரமும், பண்பாட்டு விழுமியங்களும் மிகுந்த கர்நாடக மாநிலத்துக்கும், அறிவும் அறமும் நிரம்பக் கொண்டவர்களாக அறியப்படுகிற கன்னட மக்களுக்கும் அது அவமானமின்றி... வேறென்ன?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -


வாட்டாள் நாகராஜின் கோமாளித்தனங்கள் + அவரது குபீர் சிரிப்பு பேட்டிகள் + காவிரி பிரச்னையின் உண்மையின் வரலாறு + சர்வதேச நதிநீர் பங்கீட்டுச் சட்டங்கள் குறித்து மேலும் படிக்க...

வாட்டாள் நாகராஜ்... யாருடைய எதிரி?


பாகுபலி சர்ச்சைக்கு விளக்கம் அளித்து நடிகர் சத்யராஜ் பேசியுள்ள விரிவான வீடியோ உரை:





5 கருத்துகள்:

  1. The inside issue is that the film's distribution rights for Karnataka is not sold to the karnataka distributors. The director is releasing it himself. The vested interests are propping Vattaal Nagaraj, to make a hill out of a mole. That is why, the karnataka film chamber is also supporting them.

    பதிலளிநீக்கு
  2. கண்ணதாசன், திருப்பூர்22 ஏப்ரல், 2017 அன்று AM 7:15

    இங்கிருக்கும் கன்னட நடிகர்கள் யாரும் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை? நியாயம் யார் பக்கம் இருக்கிறது என்று தெரியாமல் பாகுபலி இயக்குனர் தனது பட வியாபாரத்துக்காக சத்தியராஜை மன்னிப்புக் கேட்க வைத்த செயல் ஏற்றுக் கொள்ள முடியாதது. பாகுபலியை தமிழகம் புறக்கணித்தால் என்ன ஆகும்?

    பதிலளிநீக்கு
  3. மிக சரியான பதிவு.கண்டிப்பாக அவமானம் அவர்களுக்குத்தான் .

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...