புதன், 15 மார்ச், 2017

அகநானூறும்; ஆன்ட்ராய்ட் போனும்!

டலை காணவும், அதில் கால் நனைக்கவும் பிடிக்காதவர்களும் உண்டோ? ராமநாதபுரத்தில் இருந்து தீவு திசையில் செல்கையில், கருப்பு நிற தார்ச்சாலையின் இரு மருங்கும் திடீரென பளீர் வெள்ளை மணல் பரப்பு ஆக்கிரமிக்கும். அடுத்த சிறிது நேரத்தில் முகத்தில் மோதுகிற உப்புக்காற்றுடன் இடது, வலது இருபுறமும் நீல நிறக் கடல், அடுக்கடுக்கான அலைகளுடன் வந்து சுகம் விசாரித்து நிற்பதை வேடிக்கை பார்ப்பது எத்தனை சுகம்? இரவும், பகலும் உரசிக் கொள்கிற வேளைகளில் கடற்கரைகள்... சந்தேகமின்றி சொர்க்கங்கள். இல்லையா...? ஆனால், இந்தப் பரப்புகளில் நிலவுகிற பிரச்னைகள் அதிகம் வெளியில் தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும்... கடலில் மூழ்கியிருக்கிற பனிப்பாறையின் நுனிப்பரப்பு போல சிறிதளவே அறியமுடிகிறது. நெஞ்சில் கள்ளமில்லா, வெள்ளை மனிதர்கள் நிறைந்திருக்கிற இடம் நெய்தல்.


நேரம் தவறினால்... உர்ர்ர்!

ரங்கலும், இரங்கல் நிமித்தமும் - அதாவது, பிரிவு தாங்கமாட்டாமல் வருந்திக் கிடத்தல் - நெய்தல் நிலப்பரப்புக்கு தொல்காப்பியம் வகுத்து வைத்திருக்கிற உரிப்பொருள். ஐந்திணைகளைப் பொறுத்தளவில், முல்லை மற்றும் நெய்தல் நில பெண்களுக்கிடையில் ஒரு ஒற்றுமை உண்டு. (இருத்தலும் இருத்தல் நிமித்தமும், இரங்கலும் இரங்கல் நிமித்தமும்). இரு திணைகளைச் சேர்ந்த ஆண் சிங்கங்களும் பொருள் சேர்ப்பதற்கென, வீடு நீங்கி தூரம், தொலைவு செல்வது வாடிக்கை. ‘குட்-பை... ஸீ யூ...’ சொல்லிச் சென்ற தலைவன் வருவதெப்போ என வழிபார்த்து காத்துக் கிடப்பது சின்னப் பெண்களின் வழக்கம். ஆம்பளைப் பசங்களுக்கு ஆயிரம் வேலை. சொன்ன நேரத்தில் என்றைக்கு வந்திருக்கிறார்கள்? முல்லைப் பெண்கள், உர்ர்ர் முகத்துடன் காத்திருப்பார்கள். இது இருத்தலும், இருத்தல் நிமித்தமும். ஒப்பீட்டளவில், அதிக ஆபத்துகளற்றது முல்லை நிலமென்பதால், இந்த ஏரியாப் பெண்கள் கோபித்துக் கொண்டு ‘வரட்டும், ஒரு கை பார்க்கிறேன்’ என்று இருக்கலாம். தப்பில்லை.


நெய்தல் பெண்கள் நிலை அப்படியல்ல. எதுவும் நிச்சயமற்ற கடல் பரப்புக்குள் சென்றிருக்கிறான் தலைவன். சொன்ன நேரத்தில் ஆள் வரவில்லை என்றால்... இங்கு கோபம் வராது. பயம்தான் வரும். புயலோ, மழையோ... போன இடத்தில் என்ன ஆச்சோ என்று அச்சம் ஆளை விழுங்கும். இதுவே, நெய்தல் நிலப் பெண்களின் மனப்போக்கை படம் பிடித்துக் காட்டுகிற உரிப்பொருளாக தொல்காப்பியம் வகுத்திருக்கிற இரங்கலும், இரங்கல் நிமித்தமும். கடலின் விளிம்பில் படகின் சுவடு தெரிந்தால் கூட நிம்மதியில்லை. கரையில் அவன் கால் பட்டப் பிறகே, போன உயிர் திரும்பி வரும்.

‘4 ஜி’ இல்லையா?


ந்த மண்ணுக்கே உரித்தான சில விஷயங்கள்... சுவாரஸ்யமானவை. பருவ வயதை எட்டிய பெண் எத்தனை நேரம் ஓலைக்குடிசைக்குள் உட்கார்ந்து பொழுதை கடத்த முடியும்? ஆன்ட்ராய்டும், ‘ஃபோர் ஜி’யும் இல்லாத காலம்.
தோழிகளுடன் கடற்கரை மணற்பரப்புக்கு வந்து விடுவாள். அங்கு மணல் வீடு கட்டி விளையாடுவது ஆகச்சிறந்த பொழுதுபோக்கு. ‘சிற்றில் கட்டி விளையாடல்’ என்று இந்த பொழுதுபோக்கை சங்க இலக்கியங்கள் குறிக்கின்றன.
‘‘மூத்தோர் அன்ன வெண்தலைப் புணரி 
இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும்...’’
என்கிற அகநானூறு (90 : 1-2) வரிகள் அதை உறுதிபடுத்துகின்றன. தோழிகளுடன் சேர்ந்து கடற்மணல் குவித்து வீடு கட்டி விளையாடுவது நெய்தல் பெண்களின் பொழுதுபோக்காம். பசங்களை விடவும் இந்த அலைகள் மோசம். சின்னப் பெண்கள் ஆசை ஆசையாக கட்டிய வீடுகளை கடல் அலைகள் (புணரி - கடல், வெண்தலை - நுரைகளுடன் கூடிய அலை) மோதிச் சிதைத்து உருக்குலைத்து விட்டு போகுமாம். என்னா... கெட்ட குணம்??!!

கால்கட்டு எப்போ?

டற்கரை, இளவட்டங்களின் ஜங்ஷன் பாயிண்ட்டாகவும் இருந்திருக்கிறது.
‘‘ஊதை ஈட்டிய உயர்மணல் அடைகரை 
கோதை ஆயமொடு வண்டல் தைஇ 
ஓரை ஆடினும் உயங்கும்நின் ஒளியென...’’
- அதே அகநானூறு தான் (60 : 9-11). தன்னுடைய ‘வுட்பி’யை சந்திப்பதற்காக பையன் முகத்துக்கு பவுடர் அடித்துக் கொண்டு வருகிறான். அவனிடம் தோழி இப்படிச் சொல்கிறாளாம். ‘‘சும்மா, சும்மா வந்து பாத்துட்டுப் போறது நல்லதுக்கில்லைப்பா. அவளுக்கு இருக்கிற ஒரே பொழுதுபோக்கு கடற்கரைக்கு வந்து விளையாடறதுதான். நீ அடிக்கடி வர்றது தெரிஞ்சா, அதுவும் கெட்டுப் போகும். வீட்டுக்குள்ளயே வெச்சு பூட்டி ஹவுஸ் அரெஸ்ட் பண்ணீடுவா அவளோட அம்மா...’’ என்று எச்சரிப்பதன் வாயிலாக, காலா காலத்தில் ஒரு கால் கட்டு போட வலியுறுத்துகிறாள் தோழி.

கையில் ஒரு மந்திரம்!

ம்பிக்கைகள் வினோதமானவை. ஏரியாவுக்கு ஏரியா அது வித்தியாசப்படும். முல்லை நிலத்தின் ‘விரிச்சி கேட்டல்’ ஆச்சர்யமாக இருந்ததில்லையா? நெய்தல் நிலப் பெண்களிடமும் ஒரு வித்தியாச நம்பிக்கை இருந்ததை சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது. ‘என்னமோ, ஏதோ... எண்ணம் திரளுது கனவில்...’ என்று மனதுக்குள் பாட்டுப்பாடிய படி மணல்வெளியில் சுற்றித்திரிகிற கடல்புர சுந்தரிகளுக்கு, இருந்திருந்தார்ப்போல திடீர் சந்தேகம் வரும் (வராம எப்படி இருக்கும்?!) - ‘நம்மாள், நம்மளை கை புடிப்பானா? இல்லை,  ஏமாத்திட்டு எஸ்கேப் ஆகிடுவானா? இவனை முழுசா நம்பலாமா?’. ஆள் நல்லவனா, கெட்டவனா என்று தெரிந்து கொள்ள கையிலேயே அவர்கள் ‘மந்திரம்’ வைத்திருந்தார்கள்.

ண்ணை இறுக்க மூடிக் கொண்டு, சுட்டு விரலால், கடல் மணல் பரப்பில் ஒரு வட்டம் போடுவார்களாம். சரியாக துவங்கிய இடத்திலேயே வட்டம் வந்து சேர்ந்து விட்டால்.... சக்சஸ்! கொசுவர்த்தி சுருள் போல வட்டம் உள்ளுக்குள் சுற்றினால்... கஷ்டம்!! இந்த ‘மேஜிக் டெஸ்ட்’டிற்கு ‘கூடல் இழைத்தல்’ என்று பெயர்.
‘‘கோடு வாய் கூடாப் பிறையை, பிறிது ஒன்று
நாடுவேன், கண்டனென்; சிற்றிலுள் கண்டு, ஆங்கே,
ஆடையான் மூஉய் அகப்படுப்பேன்; சூடிய,
காணான் திரிதரும்கொல்லோ மணி மிடற்று
மாண் மலர்க் கொன்றையவன்...’’
- கலித்தொகை (142 : 24-29) ‘கூடல் இழைத்தல்’ காட்சியை இப்படி படம் பிடித்துக் காட்டுகிறது. மணல் பரப்பில் நாலு பேர் பார்த்து விட்டால்... சிக்கலாகி விடுமே? சுதாரிப்பாக சில பெண்கள் வீட்டில் யாருமில்லாத போதுகளில் வட்டம் போட்டு ஆண்களின் நேர்மையை டெஸ்டிங் செய்வார்களாம்! பசங்க, பாவந்தான்... இல்லை?!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

7 கருத்துகள்:

  1. சொல்லிச்சென்றவிதம் அற்புதம்
    வாழ்த்துக்களுடன்.

    பதிலளிநீக்கு
  2. விளக்கங்கள் தான் அசர வைக்கிறது என்றால் இணைத்த படங்கள் அதை விட...!

    எங்கே இதையெல்லாம் பிடிக்கிறீர்கள்...?

    பதிலளிநீக்கு
  3. பதிவையும், படத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. 👌🏽 வழக்கம் போலவே அருமை. படிக்கிற காலத்துல நீங்க தமிழாசிரியராக இருந்திருந்தா நிச்சயம் சங்க இலக்கியங்களில் புகுந்து விளையாடியிருப்பேன் அண்ணே 😊

    பதிலளிநீக்கு
  5. தெரிந்தெடுத்த பாடல்களும் அதற்குத் தக்க படங்களும் நல்ல தேர்வு

    பதிலளிநீக்கு
  6. அருமை.

    படங்கள் அனைத்தும் சிறப்பு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...