வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

சுந்தரி நீயும்... சுந்தரன் ஞானும்!

திகளை எல்லாம் இன்றைக்கு நாம் கொஞ்சம் பெரிய சைஸ் சாக்கடைகளாக மாற்றி விட்டாலும் கூட, இயல்பில் அவை மிக அழகானவை. அவற்றின் கரைகளில்தான் நாகரிகம் பிறந்து, வளர்ந்து மனிதனை, மனிதனாக மாற்றி அழகுபடுத்தியிருக்கிறது. மருத நிலம் என்பது நதிக்கரைகளில் அமைந்தது என்பதால், மனித வரலாற்றின் முக்கிய காலகட்டம் இந்த நிலப்பரப்பிலேயே பதிவாகியிருக்கிறது. உலகின் சகல நதிக்கரை நாகரிகங்களையும் புரட்டிப் பாருங்கள்... கலையும், பண்பாடும், கலாச்சாரமும் அதன் உச்சத்தைத் தொட்டது அந்த வெளியில்தான். மற்ற திசைகளுடன் ஒப்பிடும் போது, நமது மருத மண்ணுக்கு கூடுதல் பெருமை இருக்கிறது. வேறெங்கும் விட இங்குதான் எக்கச்சக்க இலக்கியங்கள், படைப்புகள் தோன்றி நம்மொழிக்கு நிலையான புகழ் சேர்த்திருக்கின்றன. கலையும், இலக்கியமும் மருதத்தில் வளர அப்படி என்னவாம் காரணம்?


சும்மா... சும்மா!


லையிலும், வனத்திலும் வாழ்ந்தவர்களை விடவும், மருத நிலத்துக்காரர்களுக்கு ஓய்வு அதிகம் கிடைத்தது. கவலைகளும் குறைவாக இருந்தது. அப்புறம் என்ன... சும்மா இருக்கிற மனசு, சும்மா இருக்குமா? காலையில் கதவைத் திறந்து வெளியே வந்ததும், பளீச்சென இருக்கிற வாசலையும், அதில் டிசைன், டிசைனாக மாக்கோலம் இடப்படுகிற அழகையும் பார்த்ததும்... ‘சுந்தரி நீயும்... சுந்தரன் ஞானும்...’ என்று ‘கவித... கவித...’ எழுதவோ, பாடவோ தோணும்தானே? எழுதித் தள்ளியிருக்கிறார்களாக்கும். சங்க இலக்கியங்களைப் பாருங்கள். உலகின் எந்தப்பகுதி நதிக்கரை நாகரிகக்காரர்களை விடவும் பெட்டராக நம்மாட்கள் பின்னி எடுத்திருக்கிறார்கள்.

போயே போச்சு... போயிந்தே!

தினெண்கீழ் கணக்கு நூல்களுள் ஒன்று ஐந்திணை ஐம்பது. அதில் இருந்து நேயர் விருப்பமாக ஒரு பாடல்...
‘‘குளிரும் பருவத்தேஆயினும், தென்றல்
வளி எறியின், மெய்யிற்கு இனிதாம்; ஒளியிழாய்!
ஊடி இருப்பினும், ஊரன் நறு மேனி
கூடல் இனிது ஆம், எனக்கு...’’  (ஐந்திணை ஐம்பது - 30)

- அந்தக் காலத்து பெண்களின் மனதை அப்படியே படிக்கிறது இந்தப் பாடல். வயலில் விளைந்து வந்த வருமானத்தை வாரிச் சுருட்டிக் கொண்டு டான்ஸ் பார்க்க கிளம்பி விட்டார் சார். மேடம் அவர் மேல் மகா கோபமாக இருக்கிறார். ‘வரட்டும். உண்டு, இல்லைனு ஒரு வழி பண்ணீடறேன்...’ என்று காத்திருக்கிறார். கையிருப்பு கரைந்ததும்... போன மச்சான் திரும்ப வந்தார் கதையாக லேசாக தயங்கித் தயங்கி வீட்டுக்கு வருகிறார் சார். மேடம் எப்படி ரெஸ்பான்ஸ் செய்திருப்பார் என்று யோசிக்க முடிகிறதா...? இல்லை... நீங்கள் நினைப்பது போல இல்லை.  கோபமெல்லாம் மறந்து, தடபுடல் கவனிப்பு! பக்கத்து வீட்டு தோழிக்கு செம டென்ஷன். ‘ஏண்டீ.. இவளே! அந்த மனுஷன் வந்ததும் உண்டு இல்லைனு ஒரு வழி பண்ணுவன்னு பார்த்தா... இப்படி பல்லை காட்டிகிட்டு நிக்கிற?’ என்கிறார் கோபமாக.

தோழிக்கு மேடம் கொடுக்கிற பதில் இப்படியாக இருக்கிறது: ‘‘அவரு ‘அங்க’ போயிருந்த காலத்தில பயங்கர கோபமா இருந்தது என்னவோ உண்மைதான். வந்ததும் புரட்டி எடுக்கணும், துவைச்சு தொங்கப் போடணும்னு நினைச்சதும் கூட உண்மைதான். மழைக்காலத்து கூதல்காற்றுக்கு மத்தியில், திடீரென இதமான தென்றல் அடித்தால்... சுகமாக இருக்கிறதில்லையா? அப்படித்தான். அவர் இல்லாத போது செம கடுப்பாக இருந்தது. ஆனால், இப்போ அவர் முகத்தைப் பார்த்ததும் அதெல்லாமே பறந்து போச்சு. போயே போச்சு. போயிந்தே. இட்ஸ் கான்...’’ என்கிறார் மேடம்.

வாழ வைக்கும் பெரியாறு


லை, கலாச்சாரம், பண்பாடு, இலக்கியங்கள் பிற நிலப்பரப்புகளை விட, மருத மண்ணில் வேர் பிடித்து வளர விசேஷித்த காரணம் என்ன? கேள்வி பிறக்கிறதில்லையா? இந்த மண்ணின் வளம். கல்லை விதைத்தாலும் கனியாக தளிர்க்கச் செய்கிற வளம். மருத நிலத்து மண்ணுக்கு அது ஒன்றும் சும்மா வந்து விடவில்லை. இயற்கை கொடுத்தது பாதி. மனித உழைப்பு மீதி. குறிஞ்சி, முல்லை பரப்புகளில் தோன்றி காட்டாறாக உருண்டு, புரண்டு, சீறிப் பாய்ந்து வந்த நதிகள் எல்லாம்... ஆகாய மார்க்கமாக அப்படியே கடலுக்கா போய்விடும்? தரையை அவை தழுவிய இடம் மருத நிலம். தேனிக்கு இந்தப்பக்கம் கருவேலங்காடாக இருந்தாலும், அந்தப்பக்கம்... கம்பம் பள்ளத்தாக்கு எப்படி இருக்கிறது பாருங்கள். மலையில் பிறந்து, வனத்தில் தவழ்ந்து, தரையைத் தழுவியதும்... வளத்தை வாரிக் கொடுக்கிறதா... பெரியாறு?

தடம் புரண்டது ஏன்?

ருத நிலம் என்பது ஆறு, ஏரி என நீர்ப்பிடிப்பான, நீர்வளம் அதிகம் கொண்ட பகுதி. மண்ணைக் கொத்தி பண்படுத்தினார்கள். எருது பூட்டிய ஏர் கொண்டு நிலத்தை உழுது பக்குவப்படுத்தினார்கள். எரு விட்டு விதை விதைத்தார்கள். நீர்பாய்ச்சி நெல் வளர்த்தார்கள். தாய் மனது போல நிலம் வஞ்சகமில்லாமல் வாரிக் கொடுத்தது. விதைத்ததற்கும் மேலாக, பல மடங்கு அள்ளிக் கொடுத்தது. பணம் புரண்டது. வந்த பணத்தில் அடுக்கடுக்காய் வீடுகள் கட்டி ஆடம்பர வாழ்க்கை பழகினார்கள். பொருள் மிகுந்ததால், உழைப்புக்கான அவசியம் குறைந்தது. கிடைத்த ஓய்வு நேரத்தில் கலை வளர்ந்தது. மிகுதியான பொருளும், ஓய்வுமே தடம் புரட்டியது!

‘‘கோலச் சிறு குருகின் குத்து அஞ்சி, ஈர் வாளை
நீலத்துப் புக்கு ஒளிக்கும் ஊரற்கு, மேல் எல்லாம்,
சார்தற்குச் சந்தனச் சாந்து ஆயினேம்; இப் பருவம்
காரத்தின் வெய்ய, என் தோள்...’’ (ஐந்திணை ஐம்பது 24)
வர் கிளம்பிப் போய் ஆறு வாரமாச்சு. தற்செயலாக, அவரது நண்பரைப் பார்க்கிறார் தலைவி. மனதில் இருக்கிற வருத்தமெல்லாம் வார்த்தைகளைச் சூடிக் கொண்டு அருவியாகக் கொட்டுகிறது. ‘‘முன்பெல்லாம் நெருங்கி அணைக்கையில், சந்தனக் குழம்பு போல எனது தோள்கள் அவருக்கு குளிர்ச்சியாக இருந்தன. இப்போது என்னைப் பார்த்தாலே ஏன் பிடிக்காமல் போகிறது? புண்ணிற்கு இடுகிற மருந்து போலல்லவா எனது தோள்கள் அவருக்கு எரிச்சல் தருகின்றன...?’’ என்று ஆதங்கம் ஊற்றெடுக்க கண்ணீர் சிந்துகிறாள் தலைவி.


- மருத நிலத்தின் கூறுகளை சமரசங்களின்றி பதிவு செய்கின்றன சங்க இலக்கியங்கள். கற்பனை செரிவுகளின் பிரமாண்ட வீச்சையும் இங்கு பார்க்க முடிகிறது. அந்த மண்ணின் மாந்தர்களின் குணநலன்களையும் அறிந்து கொள்ளமுடிகிறது. எந்த மறைப்புமின்றி, அந்த நிலத்தை உள்ளது உள்ளபடி படம் பிடித்து காட்டுகிற பாங்கில்... நமது சங்க இலக்கியங்கள் உலகளவில் உயர்ந்த மதிப்புப் பெறுகின்றன.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

6 கருத்துகள்:

  1. அழகாகச் சொல்லி உள்ளீர்கள். நகைச்சுவை இழை ஓட...எளிதாக மனதில் நிற்கும் வகையில்....அதுவும் இப்போதைய இளைஞர்கள், இப்படிச் சொன்னால் ஆர்வத்துடன் கேடப்பார்கள்...பதியவும் செய்யும்...ரசித்தோம்..

    பதிலளிநீக்கு
  2. வரவர இளமை டாலடிக்கிறது BRO

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...