வெள்ளி, 1 ஜூலை, 2016

ஒரு செய்தியாளனின்... கடைசிச் செய்தி!

ரணம் என்பது புதிரான, அரிய, ஆச்சர்யப்படத்தக்க, எங்கும் காணப்படாத, இதற்கு முன் நிகழ்ந்திராத விஷயம் அல்ல. அது இயல்பானது. நீக்கமற நிறைந்திருக்கிறது. பூமியில் இருக்கிற உயிரினங்கள் ஒவ்வொன்றையும் அது காற்றைப் போல கடந்து / தழுவிச் செல்கிறது; சென்று கொண்டிருக்கிறது. ஆனாலும் கூட... மரணம், தனக்குள் ஒரு மாபெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் நிறைத்து பதுக்கி வைத்திருக்கிறது. மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாத, சகித்துக் கொள்ளமுடியாத தருணங்களும் இருக்கிறது. அது வந்து சந்திக்கிறதா; அதைச் சென்று சந்திக்கிறார்களா என்பதைப் பொறுத்து, வேதனையின் வீரியம் மதிப்பிடப்படுகிறது. 49 வயது என்பது மரணத்துக்கான பொழுதல்ல. என்பதால்... பத்திரிகை செய்திகளுடன் வாழ்க்கை நடத்திய ஒருவரின் மரணம், கூடுதலான விசனத்தை விதைத்து நிற்கிறது.


மிழ் முரசு நாளிதழின் மதுரை பிரிவு செய்தி ஆசிரியராக பணிபுரிந்த சி.திருவருளனின் திடீர் மரணம் (ஜூன் 29), மதுரை மாவட்ட பத்திரிகையாளர்கள் வட்டத்தை வேதனைக்குள் ஆழ்த்தியிருக்கிறது. குடும்பத்தினர், நண்பர்கள் என நெருங்கிய வட்டத்தில் ‘அருள்’ என்றும், பத்திரிகை நண்பர்களால் ‘திரு சார்’ என்றும் அறியப்பட்ட அந்த செய்தியாளன், தனது 49 ஆண்டுகால வாழ்க்கையின் வாயிலாக சில செய்திகளை விட்டுச் சென்றிருக்கிறார்.


நானும், அவரும் ஒரே நிறுவனத்தில், சக பத்திரிகையாளர்களாக பத்து ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறோம். இதில், பாதி நாட்கள் அடுத்தடுத்த இருக்கையில் அமர்ந்து பணியாற்றியிருக்கிறோம் (மாலை நாளிதழான ‘தமிழ் முரசு’ மதுரை பிரிவில் உதவி ஆசிரியர்களாக). உதவி ஆசிரியர் பணி என்பது 24 மணிநேரமும் செய்திகளால் நிரம்பியது அல்ல. 8 மணிநேரப் பணியில் ‘வரத்து இல்லாத’ தருணங்கள் ஆங்காங்கே வெற்றிடங்களாக நகரும். செய்திகளற்ற அந்த வெற்றிடத்தை கேலி, கிண்டல், நையாண்டி உரையாடல்களிட்டு நாங்கள் நிரப்பியிருப்பது... இன்றைக்கு திரும்பிப் பார்க்கையில் உறைந்த காலமாகத் தெரிகிறது.

னைத்துமே நையாண்டி தருணங்கள் அல்ல. நான் மதுரை மாவட்டத்துக்காரனாகவே இருந்தாலும் கூட, என் மேல் அடிக்கிற மதுரையின் வாசனை, அவரிடம் இருந்து நான் பெற்றது. அலுவலகம் தாண்டிய எங்களது சந்திப்புகள், நீண்ட உரையாடல்களால் நிரம்பியது. உரையாடல்களின் பெரும் பகுதி இந்த மண்ணில் இருந்து கிளைத்து வளர்ந்த பண்பாட்டு, கலாச்சார வேர்களை அடையாளம் காண்பதில் மையம் கொண்டிருக்கும். அவர் உசிலம்பட்டி காரர். அந்த மண்ணில் செல்வாக்கு நிரம்பிய குடும்பப் பின்னணி கொண்டவர். என்பதால், உசிலம்பட்டி மண்ணின் அடையாளங்களை, அலங்கார ஜோடனைகளின்றி, நேரடி நிஜமாக, காட்சி பிம்பமாக கண்களுக்கு முன் பிரதிபலித்துக் காட்டியவர். அவரிடம் இருந்து நான் உள்வாங்கிக் கொண்டேன்.

சி.திருவருளனுடன் (இடது) நான் (வலது).
க ஊழியர்களாக மட்டுமே கடந்து விடாமல், அதற்கும் மேலாக... பல தருணங்களில் ஒருவருக்கொருவர் ஆறுதலாக, பாதுகாப்பாக, பலமாக இருந்திருக்கிறோம். ஒரு பத்திரிகையாளனாக எனது மகிழ்ச்சியான பொழுதுகளை மீள்நினைவுகளிட்டுப் பார்க்கும் போது, அநேகம் தருணங்களில் அவரும் அங்கம் வகித்திருப்பதை உணரமுடிகிறது. யாருக்கும் தீது நினைக்கிற குணம் இல்லை. என்பதால், அவரால் யாருக்கும் ஆபத்து இருந்ததில்லை. மனதில் இருப்பதை மாறுபாடின்றி வார்த்தைகள் பிரதிபலிக்கும். எனவே, நம்பிப் பழக உகந்தவர். நட்பில் எதிர்பார்ப்புகளற்றவர். ஆகவே, அவருடனான பொழுதுகளில் கலப்படமற்ற நிஜம் இருந்தது. அரிதான இந்தக் குணம் மட்டுமல்ல, அவரிடமிருந்து இருந்து நாம் எடுத்துக் கொள்வதற்கு இன்னும் ஒரு விஷயமும் இருக்கிறது!

குறைகளற்ற மனிதர்கள் இல்லை. அவரிடமும் இருந்தது. சராசரித் தமிழர்கள் போலவே, மதுவின் சுழலில் அவரும் சிக்கியிருந்தார். அதன் பிடியில் இருந்து அவரை மீட்க குடும்பத்தினரும், நண்பர்களும் எடுத்த முயற்சியில் வெற்றி என்று சொல்ல எதுவுமில்லாதது வேதனை. மதுவிடம் இருந்து அவரை பிரித்தெடுத்து மீட்கும் வல்லமை, கடைசியாக... மரணத்திடம் மட்டுமே இருந்ததாக இப்போது புரிந்து கொள்ளமுடிகிறது. மிக உயர்ந்த குணங்கள் நிரம்ப இருந்தும் கூட, அந்த நச்சுத் திரவத்தின் வீரியம் அதனினும் மேலானதாக இருந்திருக்கிறது. வாழ்க்கையை அழித்து நாசமாக்குகிற வல்லமை கொண்ட அந்த விஷம்... தூரத்தில் அல்ல; நமக்கு மிக அருகிலேயே, நம்மைச் சுற்றியே, நமக்கு எட்டுகிற இடத்திலேயே இருக்கிறது.  எதிரே விரிந்து கிடக்கிற வாழ்க்கையை எதிர்கொண்டு செல்கிற ஒவ்வொருவருக்கும், மறைபொருளாக அவர் விட்டுச் சென்றிருக்கிற மற்றொரு செய்தி இது.


த்தனையோ நாட்கள் நீண்ட எங்களது உரையாடல்களை முடித்தப் பிறகு, ஒருவருக்கொருவர் விடைகொடுத்து பிரிந்து சென்றிருக்கிறோம். இந்த முறை... ஜூன் 30ம் தேதி நான் அவருக்கு விடைகொடுத்து, பிரிந்து வந்த நிமிடம், அதற்கு முந்தைய நி்கழ்வுகளில் இருந்து நிச்சயமாக வேறுபட்டது. அவருக்கு விடைகொடுக்க வேறொரு தருணம் இனி வாய்க்காது. ஒரு செய்தியாளனாக அவர் எழுதிய எத்தனையோ ஆயிரம் செய்திகளில் ஆகச்சிறந்ததாக இப்போது எனக்குத் தெரிவது... படிப்பதற்கு நிறைய விஷயங்களை திரட்டி வைத்திருக்கிற அவரது வாழ்க்கையே!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

13 கருத்துகள்:

  1. எழுத்துக்களுக்கு மத்தியில் வாழ்க்கை நடத்துவது மிகக்கடினமானது. எத்தனை காலம் என செய்தியின் அளவில் தான் நமது காலங்கள் கணக்கிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு சக ஊழியர் குறித்த மெய்ப்பித்தலான உண்மைகளை எந்த பாசங்கற்றும் பதிவிட்டுள்ளீர்கள். அவரின் நடவடிக்கைகளில் மிகக்குறுகிய காலமே காண்பதற்கான வாய்ப்பு கிட்டியது. எதையும் அதிர்ந்து பேசாத அவரின் குணம் தான் காலன் அவரை மிக வேகமாக அழைத்துச் சென்றதா எனத்தெரியவில்லை. தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் கல்லாக்களில் கிடக்கும் கரன்சியின் மணங்கள், பல வீடுகளில் சாவுக்களை பீடித்த பத்தி வாசனையை விட்டுச் சென்று விடுகிறது. திரு ஸாரின் வீட்டிலும் அப்படியே. பத்திரிகை பணி என்பது உள்ளடக்கத்தை மட்டுமின்றி நமது உடலையும் பாதுகாக்க வேண்டும் என்பதை திரு ஸார் உணர்த்திச் சென்றிருக்கிறார் நாம் அனைவருக்கும்.
    - ப.கவிதா குமார், மதுரை

    பதிலளிநீக்கு
  2. நண்பா திரு சாரின் நினைவலை இன்னும் அகலவில்லை. ஏ மகாராஜா ஒரு பாட்டில் கரெக்ட் பன்னுபா.. அவர் சொல்வது கேட்டிட்டே இருக்கு. சனிக்கிழமை
    தமிழ்முரசு டியூட்டிக்கு வரும்போது ஒன்றாக சேர்ந்து சாப்பிடுவோம், சில நாட்கள் காலை 6 மணிக்கு போன் போட்டு சாப்பாடு வாங்கி வரச் சொல்வார்.

    பதிலளிநீக்கு
  3. நண்பா திரு சாரின் நினைவலை இன்னும் அகலவில்லை. ஏ மகாராஜா ஒரு பாட்டில் கரெக்ட் பன்னுபா.. அவர் சொல்வது கேட்டிட்டே இருக்கு. சனிக்கிழமை
    தமிழ்முரசு டியூட்டிக்கு வரும்போது ஒன்றாக சேர்ந்து சாப்பிடுவோம், சில நாட்கள் காலை 6 மணிக்கு போன் போட்டு சாப்பாடு வாங்கி வரச் சொல்வார்.

    பதிலளிநீக்கு
  4. தினகரன் குழுமத்தில் எனக்கு தெரிந்து இரண்டு செய்தி ஆசிரியர்களை மது காவு வாங்கியுள்ளது. திருவருளன் சாருக்கு முன்பு தமிழ்முரசு மற்றும் தினகரன் ஆசிரியராக பணிபுரிந்த கந்தவேல் சாரை நான் இத்தருணத்தில் நினைவுக்கூர்கிறேன். எத்தனையோ நபர்கள் அந்த இடத்தை நிரப்பினாலும் ஒரு நபரின் இடத்தை மற்றொருவர் நிரப்ப முடியாது. குழந்தைகளுக்கு அம்மா, அப்பா இருவருமே அவசியம். இத்தருணத்தில் அவர்கள் இருவரும் தங்கள் குழந்தைக்கு ஆற்ற வேண்டிய கடமையை பாதியிலேயே விட்டுவிட்டு மரணத்தினை தானே தேடிச் சென்று விட்டனர். தங்கள் பொறுப்பையும், கடமையையும் அவர்கள் மனைவிகளுக்கு விட்டுச் சென்று விட்டனர். ஒரு அம்மா அப்பாவின் பணியையும் சேர்ந்து பார்க்கும் போது
    பொருளாதாரச்சுமையோடு, மன அழுத்தம் எவ்வளவு உண்டாகும் என்பதை அம்மாவான என்னால் உணர முடிகிறது. தினகரன் குழுமத்தில் இவர்கள் மரணம் இறுதியாக இருக்கட்டும்.
    - ஆர். ஜெயலெட்சுமி, முதன்மை நிருபர், ஜன்னல்.

    பதிலளிநீக்கு
  5. பொதுவாக செய்தியாளர்கள் காவல் நிலையத்திற்கு போன் செய்யும் போது "ஏதாகிலும் செய்தி உள்ளதா ?" சிலர் விசேஷம் ஏதாவது உன்னடா ? எனக் கேட்பது வழக்கம் .காவல் நிலைத்திலிருந்து விபத்து நடந்தது என்பார் .அதற்கு செய்தியாளர் உயிர் சேதம் உள்ளதா ? சிங்கிள் டெத்தாதா இல்லை அதிகம் உள்ளதா ?என கேட்பார்.வேறு .....சார் ஒரு 174 உள்ளது என்பார் இதெல்லாம் செய்தியாளர் வாழ்க்கையில் அன்றாடம் சாதாரண நடைமுறை .அதே போல செய்தியாளர் இறப்பையும் யாரும் பெரிது படுத்துவது இல்லை .ஏன் இறந்தவர் பணியாற்றிய செய்திதாளில் கூட செய்தி வெளியிடுவதில்லை .மேலும் செய்தியாளர் பற்றி செய்தியாளரே தவறாக போடும் காலத்தில் இறந்த செய்தியாளரை நினைவு கூர்ந்த நீங்கள் மாமனிதரே!!!!!!.😢😢😢😢

    பதிலளிநீக்கு
  6. துக்க பதிவு நேரத்தில் காலைக்கதிரில் பணியாற்றிய போது இளம்வவயதில் மறைந்த நண்பர் மார்க்கபந்து ,சேலம் தினமலர் ராமசாமி ஆகியோர் மனம் முன் நிற்கின்றனர் .

    பதிலளிநீக்கு
  7. என்ன கண்ணா என அன்போடு எனை அழைப்பவர் திருவருளன் அண்ணன், நான் டவுசர் போட்ட காலத்திலிருந்தே அவருடனான பழக்கம் இன்றும் நினைவில் உள்ளது, அவர் மறைந்தாலும் அவரது நினைவுகள் என்றும் என்னுடனே

    பதிலளிநீக்கு
  8. என்ன கண்ணா என அன்போடு எனை அழைப்பவர் திருவருளன் அண்ணன், நான் டவுசர் போட்ட காலத்திலிருந்தே அவருடனான பழக்கம் இன்றும் நினைவில் உள்ளது, அவர் மறைந்தாலும் அவரது நினைவுகள் என்றும் என்னுடனே

    பதிலளிநீக்கு
  9. என்ன கண்ணா என அன்போடு எனை அழைப்பவர் திருவருளன் அண்ணன், நான் டவுசர் போட்ட காலத்திலிருந்தே அவருடனான பழக்கம் இன்றும் நினைவில் உள்ளது, அவர் மறைந்தாலும் அவரது நினைவுகள் என்றும் என்னுடனே

    பதிலளிநீக்கு
  10. என்ன கண்ணா என அன்போடு எனை அழைப்பவர் திருவருளன் அண்ணன், நான் டவுசர் போட்ட காலத்திலிருந்தே அவருடனான பழக்கம் இன்றும் நினைவில் உள்ளது, அவர் மறைந்தாலும் அவரது நினைவுகள் என்றும் என்னுடனே

    பதிலளிநீக்கு
  11. மிகத் தெளிவான குணம் உள்ளவர். தங்களது நினைவுகூறல், மீண்டுமொருமுறை 'திரு' சாரை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தி விட்டது. தங்களுக்கு நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  12. மீண்டும் 'திரு' சாரின் நினைவலைகளுக்குள் அழைத்துச் சென்றமைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
  13. 'சார் மிகவும் அற்புதமான மனிதர்.நல்லவர்களுக்கு ஆன ஆயுசு பெரும்பாலும் குறைவாகவே அமைந்துவிடுகிறது.மீண்டும் அவரின் நினைவுகளை வருடச் செய்தமைக்கு நன்றிகள்.ஒருவரின் மீது வைத்துள்ள அளவு கடந்த அன்பு, மரியாதை,மதிப்பு போன்றவற்றை அழகாக வெளிப்படுத்தி விட்டீர்கள்

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...