புதன், 6 ஏப்ரல், 2016

தீபம் + ஆவளி = என்ஜாய்!

ந்தவாரத்தை ஒரு ஜெனரல் நாலெட்ஜ் கேள்வியுடன் ஆரம்பிக்கலாம், சரியா? சூரன், கூரன்... இவர்கள் யாரென்று கண்டுபிடிக்க முடிகிறதா? எப்போதும் நமக்கு அருகில், நம்மைச் சுற்றியே இருக்கிற இவர்கள் யாராக இருப்பார்கள் என்று யோசித்து வையுங்கள். மற்ற விஷயங்கள் பேசி முடித்து விட்டு, இவர்களைப் பார்க்கலாம்.


தீபாவளி... என்ஜாய்!
ண்டிகை காலங்கள் மகிழ்ச்சி தருபவை. வாணவேடிக்கை, பட்டாசு என்று அதகளப்படுத்துகிற தீபாவளி என்றால்... சொல்லவே வேண்டாம். இன்றைய இளைய தலைமுறை கொண்டாடுகிற முக்கியப் பண்டிகை என்கிற அடையாளம் இதற்குண்டு. சரி. தீபாவளி பற்றி ‘நம்மொழி’யில் ஏதாவது தகவல் இருக்கிறதா? தமிழ் இலக்கியங்களை எந்தப் பக்கத்தில் இருந்து புரட்டிப் பார்த்தாலும், தீபாவளி குறித்த பெரிய தகவல்கள், விவரணைகள்... இல்லை.

மிழ் அறிஞர்களிடம் விசாரித்த போது, ‘‘ஏறக்குறைய இதே காலகட்டத்தில் கொண்டாடப்படுகிற கார்த்திகை தீபத்திருவிழா பற்றி நமது இலக்கியங்களில் இருக்கிறது. ஆனால், அதை தீபாவளி திருநாளைக் குறிப்பதாகக் கருதமுடியாது. தீபாவளி கொண்டாட்டங்கள் 15ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அதாவது விஜய நகர மன்னர்கள் ஆட்சிகாலத்தின் போது நமது பகுதிக்குள் நுழைந்திருக்கலாம். ஆவளி என்ற வடசொல்லுக்கு வரிசை என்று பொருள். தீபம் + ஆவளி = தீபாவளி. உண்மையில், தீபாவளி என்ற வடசொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் புழக்கத்தில் இல்லை. தமிழர் திருவிழாவாக, தைத்திருநாளையே தமிழ் இலக்கியங்கள் சுட்டிக் காட்டி கொண்டாடுகின்றன...’’ என்கின்றனர். பரவாயில்லை. இன்றைக்கு இருக்கிற டென்ஷன் மிகுந்த வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது மா மருந்து. பண்டிகைகளும், கொண்டாட்டங்களும் மகிழ்ச்சி நிறைத்து தருகின்றன என்றால்... என்ஜாய்!

மழை எப்படி பெய்கிறது?

ழை எப்படிப் பொழிகிறது? ‘கடல்நீர் ஆவியாக மாறி, மேகமாகத் திரண்டு மழையாகக் கொட்டுகிறது’ என்று இப்போது எல்கேஜி படிக்கிற குழந்தை கூடச் சொல்லும். இது கூடத் தெரியலை என்று கேலியாக நம்மைப் பார்க்கும். சரி. 2 ஆயிரம், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதே கேள்வியைக் கேட்டால்...?

கிரேக்க தத்துவ ஞானியும், மாபெரும் அறிவியல் சிந்தனையாளராக மதிக்கப்படுபவருமான தேலஸ் (Thales of Miletus - கி.மு. 624 - கி.மு. 546) ‘‘கடலின் அடியாழத்தில் நீர் உற்பத்தியாகிறது. கடலில் உள்ள நீர் மண்ணால் உறிஞ்சப்பட்டு பின் அது மலைகளில் இருந்து ஆறாக வெளிப்படுகிறது..’’ என்கிறார். அவருக்குப் பிறகு வந்த மற்றொரு கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாடில் (Aristotle - கி.மு. 384 - கி.மு. 322) ‘‘குளிர்ச்சியான காலநிலைகளில் காற்று உறைந்து மழையாகப் பெய்கிறது...’’ என்கிறார்.

அறிவியல் மொழி:
ம்ம மேட்டருக்கு வரலாம்.
அதே காலகட்டத்தைச் சேர்ந்த
(கி.மு. 2ம் நூற்றாண்டு) சங்கப்புலவர்
கடியலூர் உருத்திரங்கண்ணனார்,
தனது பட்டினப்பாலையில்
பாடி வைத்திருக்கிற
இந்தப் பாடலை பாருங்கள்...

“வான்முகந்த நீர் மழை பொழியவும்
மழைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்
மாரி பெய்யும் பருவம் போல்
நீரின்றும் நிலத்து ஏற்றவும்
நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்
அளந்து அறியாப் பல பண்டம்...’’
(பட்டினப்பாலை 126-131)

தாகப்பட்டது, ‘‘கடல்நீர் ஆவியாகி, மேகமாகத் திரண்டு, மழையாகப் பொழிகிறது. அந்த மழை நீர், ஆறாக ஓடி கடலில் கலக்கிறது...’’ என்று போகிற போக்கில் சொல்லி விட்டுப் போகிறார் பாருங்கள். நீரியல் சுழற்சி பற்றிய எத்தனை தெள்ளத்தெளிவான அறிவியல் சிந்தனை...? அதுவும், எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக? அப்பாடி! சான்ஸே இல்லைதானே? ‘‘தமிழ் என்பது, இலக்கண வளம் மிகுந்த இலக்கிய மொழி மட்டுமல்ல... அது அறிவியல் மொழியும் கூட, இதில் இல்லாதது... வேறு எதிலும் இல்லை...’’ என்று வெளிநாட்டு மொழியியல் நிபுணர்கள் அடித்துப் பேசுகிறார்கள் என்றால், அது சத்தியம் மக்களே!

கொக்கு வருது... ஓடுங்க!

முதல் பாராவில் கேட்ட கேள்விக்கு, விடை கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைவதால் நாய் என்கிற காரணப் பெயரால் அழைக்கப்படுகிற இந்த நன்றியுள்ள விலங்கு... காலத்தால் மிகப் பழமையானது. அத்தனை இலக்கியங்கள், வரலாற்று நூல்கள், மத, வேதப் புத்தகங்களிலும் இது பற்றிய தகவல்கள் இருக்கிறது. தமிழ் மொழி நாயை எப்படியெல்லாம் பெயர் சூட்டி அழைக்கிறது?

சூரன், கூரன், சுவர், கணங்கன், அக்கன், குரைமுகன், ஞமலி, சாரமேயன், ஞாளி, எகினன், குக்கல், சுனகன், பாசி, புரோகதி... இதெல்லாம் மிஸ்டர்.லொள் லொள்ளின் தமிழ் பெயர்கள். லேடி லொள் லொள்களை முடுவல் என்று அழைக்கலாம்.

செந்நாய் (Dhole, Cuon alpinus) என்று ஒரு கூட்டம் திரியும். காட்டு நாய் என்றும் சொல்வார்கள். இதற்கு விருகம், கொக்கு என தமிழல் பெயர் இருக்கிறது. காட்டுப் பக்கம் காலாற நடந்து செல்கையில்... ‘கொக்கு வருது.... கொக்கு வருது...’ என்று யாராவது கூக்குரல் எழுப்பினால், ‘கொக்குதானே... அட விடுப்பா!’ என்று அஜாக்கிரதையாக இருந்து விடாதீர்கள்.

து, செந்நாயாகவும் இருக்கலாம்!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...