சனி, 14 பிப்ரவரி, 2015

ஆதலினால்... காதல், செய்யலாமா?

வ்வொரு பிப்ரவரி 14ன் மறுநாளிலும், நாம் இரு விதமான செய்திகளை நாளிதழ்களில் படிக்க நேரிடலாம். வாலன்டைன்ஸ் டே எனப்படுகிற (வாலன்டைன்  பாதிரியாரின் காதல் சேவை, காதலர் தினம் உருவான கதைகள் நெட்டில் ஏராளம், தாரளமாக இருக்கிறது. என்பதால், நேரடியாக மேட்டர்!) காதலர்  தினத்தை நம்மூர்களில் ஒரு கூட்டம் எதிர்க்கும். ஒரு கூட்டம் ஆதரிக்கும். எதிர்க்கிற கூட்டம் செய்கிற இம்சைகள் எழுத்தில் அடங்காது. தெருவில் மேய்ந்து  கொண்டிருக்கிற கழுதைகளை இழுத்து வந்து கழுத்தில் மாலையைப் போட்டு கல்யாணம் செய்து வைப்பது (தாங்கள் செய்வது இன்னது என்று அறியாமல்  செய்கிறார்கள் ஆண்டவரே...!), பூங்காக்களில் பொழுதுபோக்க உட்கார்ந்திருக்கிற தம்பதிகளை கூட கும்பலாய் சென்று மிரட்டுவது என்று... அவர்களது நாகரீகமான சில செயல்களை மட்டுமே இங்கே பட்டியலிட முடிகிறது.

‘பொது இடத்தில், காதல்ஜோடிகளைப் பார்த்தால்... தாலியைக் கொடுத்து கல்யாணம் செய்து வைத்து விடுவோம்...’ என சில மத அமைப்புகள் வார்னிங்  கொடுத்திருக்கின்றன. எதிர்ப்புகளை மீறி எப்படி இணைவது என்று திண்டாடும் இளம்ஜோடிகள், இந்த அமைப்புகள் கண்ணில் தட்டுப்படுவது போல காதல்  செய்து பார்க்கலாம். கல்யாணம் செய்து வைப்பதோடு, பின்னாளில்... கவுரவக் கொலை நடந்து விடாமலும் இந்த அமைப்புகள் பாதுகாப்பு கொடுக்குமேயானால், இன்னும் நல்லது. காதலர் தின பண்டிகை கால ஆஃபராக மத அமைப்புகள் இந்த வசதி செய்து தரலாம்.

சரி. ஆதரிக்கிற கூட்டம் என்ன செய்கிறது? எதிர்க்கும் கூட்டத்துக்கு சற்றும் சளைக்காத ஆக்ஷன் களேபரம் இங்கேயும் நடக்கிறது. ‘எல்லாரும் வாங்க, காதலிக்கலாம்’ என்று பிட் நோட்டீஸ் கொடுத்து, உலகத்தில் அதைத் தவிரவும் வேறு பிரச்னையே இல்லாதது போல அவர்கள் அடிக்கிற கூத்து, கண்ணைக்  கட்டுகிறது சாமீ. உண்மையில், பீட்சா, பர்கருக்கு வெகு காலம் முன்பாக மேற்கு திசையில் இருந்து இறக்குமதியான சமாச்சாரம், இந்த காதலர் தினம். அன்பை  அடையாளப்படுத்த தனியாக தினம் என்ன அவசியம்? முகம் கழுவுவதற்கும், பல் தேய்ப்பதற்கும் கூடவா தினம் கொண்டாடுவோம்? காதல் அல்லது அன்பு  என்கிற விஷயம் மனித மூளை (மனம்?!) சம்பந்தப்பட்டது. ஆயுளின் டோட்டல் வினாடிகளுக்கும் அது ஆக்சிஜன் போல அத்தியாவசியம்.

காதல் செய்யட்டும்... செய்யாமல் இருக்கட்டும். அது தனிப்பட்ட விஷயம். ஆனால், செய்யக்கூடாது. மீறிச் செய்தால், கல்யாணம் செய்து வைப்போம் என்று  கையில் தாலியுடன் வலம் வருவது, நிச்சயம் நாகரீகமான செயல் அல்ல. காதல் செய்யுங்கள்... செய்யுங்கள் என்று பிட் நோட்டீஸ் கொடுப்பதும் தேவையற்ற  எதிர்வினை. உண்மையில், காதல் என்பது என்ன? தெய்வீகமான, புனிதமான, கண்ணைக் கட்டுகிற அளவுக்கு அதி அற்புதமான உணர்வுதானா?

அறிவியல் நிபுணர்களிடம் கேட்டால், ‘அடப் போங்க சார், நீங்க வேற’ என்று சலித்துக் கொள்கிறார்கள். நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கிற ஹார்மோன்களும்,  இன்னும் சில வேதிப்பொருட்களுமே பூவும், பொக்கேவும் வாங்கிக் கொண்டு தெருமுனை, பஸ் ஸ்டாப்களில் வாட்ச்சை அடிக்கடி பார்த்த படி நாம் காத்துக்  கிடப்பதற்கான அடிப்படை காரணமாம். அன்புப் பிணைப்புக்கு அடிப்படையானது ஆக்சிடோசின் (Oxytocin Hormone) என்கிற ஹார்மோன்  தானாம். நீயின்றி நானில்லை; நானின்றி நீயில்லை என்று (கொஞ்சகாலம் முன்பு வரை) பிளேடால் கையை காதலர்கள் கிழித்துக் கொள்வது, இந்த ஹார்மோன் பண்ணுகிற வேலையால்தானாம்.

‘உன்னை நான் பார்க்கும் போது; மண்ணை நீ பார்க்கின்றாயே...’ என்று காதலன் பாடுகிறாரே, அதற்கு காரணம் டெஸ்டோஸ்ட்ரோன்  (Testosterone) என்கிற ஹார்மோன். இதுதான், பாட்டுப் பாட வைக்கிறது. அப்படி அவர் பாடும் போது, மறுபுறம் காதலி தலையை கீழே தொங்கப் போட்ட படி கால் பெருவிரலால் மண்ணைக் கிளறுகிறார் என்றால், அதற்கு ஈஸ்ட்ரோஜென் (Estrogen) என்கிற ஹார்மோன் காரணம். காதல்  மேட்டரில் ஆண் / பெண் இருவருக்கும் இடையே காரண வேறுபாடு இருக்கிறது. ஆளைப் பார்த்ததும் அசந்து போய் க்ளீன் போல்ட் ஆக வைக்கிறது  (Visual stimulation) ஆணின் ஹார்மோன். பெண்ணுக்கும் இது உண்டென்றாலும் கூட, ஒரு பாதுகாப்பு, அரவணைப்பு என்கிற விஷயம்  அங்கு பிரதானப்படுகிறது.

காதலுக்கு காரணம் மூளையில் சுரக்கிற சில வேதிப்பொருட்கள் என முந்தினதுக்கும், முந்தின பாராவில் பார்த்தோம் இல்லையா? அதென்ன வேதிப்பொருள்?  டோபமைன் (Dopamine), நோர்பைன்ப்ரைன் (Norepinephrine), ஆக்சிடோசின் (Oxytocin) இந்த மூவர் கூட்டணிதான் முக்கியம்.  ‘காதலிக்கும் பெண் தொட்டு நீட்டினால்... சின்ன தகரம் கூட தங்கமாகுமே!’ என்று ஒருவர் பாட்டுப் பாடுகிறார் என்றால், மேற்படி மூன்றும்தான் காரணம்.  காதலிக்கிற காலத்தில் மேலும், மேலும், மேலும், மேலும் பாசத்தையும், அன்பையும், பிணைப்பையும் இந்த மூன்று அதிகரிக்கின்றன, பாம்பன் பாலத்துக்கு  இணையான பாசப் பிணைப்பை இவை உருவாக்குகின்றன. எல்லாம் சரி. கல்யாணத்துக்குப் பிறகு இந்த மூன்றும் எங்கேதான் போய் விடுகின்றன? இந்தக்  கேள்விக்கு விடை சொன்னால், ஒரு காலத்தில் உருகி, உருகி காதலித்த நிறையப் பேர் சந்தோஷப்படுவார்கள். பதில் இருக்கிறதா யாரிடமாவது?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

3 கருத்துகள்:

  1. தற்பொழுது உள்ள வலைப்பூக்களில் சரியான கட்டுரையை சரியான நேரத்தில் வழங்குவதில் எனக்கு தெரிந்து பூனைக்குட்டியே no1 இடம் பிடிக்கின்றது. பூனையின் ஓட்டத்தினை ரசிக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  2. பதில் அறிந்து தெரிந்து புரிந்தாவர்கள் பாக்கியசாலிகள்...!

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...