புதன், 28 ஜனவரி, 2015

சந்திப்போமா மறுபடி சந்திப்போமா?

கோயில் திருவிழாக்களில் பார்த்திருக்கலாம். பெண்களும், சிறுவர்களும், பெரியவர்களும் அப்படியே பக்திப்பழமாக பால் குடம் சுமந்து வர, அவர்களுக்கு முன்பாக ஏழெட்டு விடலைகள் போடுவார்கள் பாருங்கள் ஆட்டம்... வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு அப்படி ஒரு ஆட்டம். கெட்ட ஆட்டம். நான் சொல்வதை நம்புவீர்கள் என்று நினைக்கிறேன். கொஞ்சமே கொஞ்சம் அடிப்படை தெரிந்தால் போதும். தமிழ் மொழியை வைத்துக் கொண்டு பேச்சிலும், எழுத்திலும் நீங்கள் கெட்ட ஆட்டம் போட முடியும். குத்தாட்டம் போடுகிற விடலைகளை விட்டு விட்டு, உங்கள் எழுத்தையும், பேச்சையும் எல்லோரும் வைத்த கண் வாங்காமல் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். ஆட்டத்துக்கு ரெடியா?


ஞாபகம் இருக்கா?

ந்தத் தொடரின் 10வது, 11வது அத்தியாயங்களில் சந்திப்பிழை பற்றி பேச ஆரம்பித்தோம். 12 லேசாக ரூட் மாறி விட்டது. இந்த வாரம் மீண்டும் ‘சந்தி’ப்போம். சந்திப்பிழையை தவிர்க்க வலி மிகும் இடங்கள், வலி மிகா இடங்கள் குறித்து தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். வலி மிகும், மிகாது என்றால் என்ன? ‘‘தமிழில் வல்லினம் மொத்தம் ஆறு எழுத்துக்கள் (க், ச், ட், த், ப், ற்). ஒரு வாக்கியத்தில், இரு சொற்கள் டச்சிங் - டச்சிங் ஆகிற இடத்தில் க், ச், த், ப்... இதில் ஏதாவது ஒரு ஒற்றெழுத்தை எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் போட்டு பயன்படுத்தினோமேயானால், அதை ‘வலி மிகுதல்’ அல்லது ‘வல்லெழுத்து மிகுதல்’ என்று தமிழ் இலக்கணம் குறிக்கிறது...’’ என்று பத்தாவது அத்தியாயத்தில் படித்தோம். ஞாபகம் இருக்கிறதா?

வல்லின எழுத்துக்களில் ட, ற இரண்டும் ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வருவதில்லை. என்பதால், மேற்படி ட், ற் இரண்டும் வலி மிகுந்து ஒற்றெழுத்தாக வருவதில்லை. க். ச், த், ப் எங்கு போட வேண்டுமோ, அங்கு போடா விட்டால் ‘சந்தி’ சிரித்து விடும். ஆக, சந்திப்பிழையை தவிர்க்க, எங்கெங்கு ஒற்றெழுத்து போடவேண்டும் என முக்கியமான விஷயங்களை மட்டும் இனி எக்ஸ்பிரஸ் வேகத்தில் பார்க்கப் போகிறோம். சாதா வேகம் இல்லை... எக்ஸ்பிரஸ் வேகம். சரியா? என்னோடு ஓட்டத்துக்கு ரெடியா?

விதி நம்பர் 1:


அந்த, இந்த, எந்த, அப்படி, இப்படி, எப்படி - இந்தச் சொற்களை அடுத்து வருகிற வல்லினம் மிகும். அதாவது க்கன்னா, ச்சன்னா, த்தன்னா, ப்பன்னா... இதில் ஒண்ணு போடணும்ணா.
சாம்பிள் மாமேய் - அந்தப் பொண்ணு, இந்தக் குட்டி, எந்தச் சரக்கு, அப்படிப் போடு, இப்படிச் சூடு (இதுவுமா தமிழு?), எப்படித் தருவாய்?

விதி நம்பர் 2:
இரண்டாம் வேற்றுமை (ஐ), நான்காம் வேற்றுமை (கு) உருபுகளில் ஒரு வார்த்தை முடிந்தால் சந்தி போடணும்... சிந்தி. (வேற்றுமை உருபுகள் பற்றி 11வது அத்தியாயத்தில் ரொம்ப, ரொம்ப டீடெய்லா பார்த்தாச்சு. செக் பண்ணிக்கோங்க!)
சாம்பிள் பிரதர்: சிவகார்த்திகேயனைப் பார்த்தேன், சிவகார்த்திகேயனுக்குப் பிடிக்கும். (இந்த வாரம் நடிகர் ஸ்பெஷல்!)

விதி நம்பர் 3:

போய், ஆய் என்பதாக ஒரு சொல் முடிந்தால் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் கட்டாயம் உண்டு.
சாம்பிள் சிஸ்டர்: போய்த் தொலைந்தான், வருவதாய்ச் சொன்னாள்.

விதி நம்பர் 4:

ஓரெழுத்து ஒரு மொழியின் பின் ஒற்று அவசியம். (ஓரெழுத்து ஒரு மொழி தெரியுமா - சிங்கிள் எழுத்து ஒன்று சிங்கம் போல தனித்து நின்று சொல்லாகி, பிரத்யேக அர்த்தம் கொடுத்தால் அது ஓரெழுத்து ஒரு மொழி. ‘வா, போ, நீ’ என்று நாம் அன்றாடம் பயன்படுக்கிற எழுத்துக்கள் போல இருக்கிறது இன்னும் எக்கச்சக்கம் - 8வது அத்தியாயம்)
சாம்பிள் கண்ணு: பூப் பறித்தான், கைக் கடிகாரம், தீக் குச்சி.

விதி நம்பர் 5:

உவமைத்தொகை பயன்படுத்தினால் வல்லினம் மிகும். முதலில் உவமைத்தொகை பற்றி தெரிந்து கொள்ளலாம். சாதாரணமாக ஒரு விஷயத்தை சொல்வதற்கும், கொஞ்சம் எக்ஸ்ட்ரா சரக்கு சேர்த்து சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறதுதானே? நம்ம ஊரில் அண்டா வாயன் என்று சொல்வார்களே... அதுதான் உவமைத் தொகை. அழகுக்கு மேலும் அழகு சேர்க்க (மதிமுகம் - நிலா போல அழகான முகமாம்! மலர்விழி - பூ மாதிரி கண்கள்), விஷயத்தை அழுத்தம் திருத்தமாக சொல்ல (மரண அடி) உவமைத் தொகை பயன்படுகிறது. உவமை முதலில் வந்து, க, ச, த, ப என்கிற வல்லெழுத்து சொல் அடுத்து வந்தால், ஒற்றுப் போட மறக்கப்படாது.
சாம்பிள் மாமு: புலிப் பாய்ச்சல், முத்துப்பல்.

சந்திப்பிழையை தவிர்ப்பதற்கு இன்னும் கொஞ்சம் விஷயங்களும் இருக்கிறது. அதுவும் தெரிந்து கொண்டால் பின்னி பெடலெடுத்து விடலாம். ஆகவே, அடுத்தவாரமும் சந்திப்போமா... மறுபடி சந்திப்போமா?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

2 கருத்துகள்:

  1. எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் உட்பட சொன்ன விதம் சுவாரஸ்யம்...

    பதிலளிநீக்கு
  2. சிவகார்த்திகேயன் எடுத்துக்காட்டு சூப்பர்!!! இந்நோவேடிவ்..

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...