வியாழன், 22 ஜனவரி, 2015

ராஜாவுக்கு கிடையாதா தமிழ் மகுடம்?

மிழ் சினிமா என்கிற மிகக் குறுகிய வட்டத்துக்குள் மட்டுமே அடக்கி விட முடியாத பெயர் - இளையராஜா. ஹாலிவுட் படங்களையும், அதையும் கடந்து,  ஆப்ரிக்க, அண்டார்டிக்க படங்களையும் காப்பியடித்து, வேஷம் கட்டி ‘யுனிவர்சல் ஹீரோ’க்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் மத்தியில், நிஜமாகவே  இவர் ராஜா. ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த அபூர்வ ஞானி. முதல் படம் ‘அன்னக்கிளி’ துவங்கி, ஆயிரமாவது படம் ‘தாரை தப்பட்டை’ வரை, ராகத்துக்குள் தாலாட்டை மறைத்து வைத்து தட்டுப்பாடின்றி விநியோகிக்கிற ராகதேவன்.


ளையராஜா பற்றியோ, அவர் ராகம் இயற்றி உலாவ விட்ட பாடல்களின் பெருமைகள் பற்றியோ எழுதுவதற்கு புதிதாக ஒரு வார்த்தை கூட இல்லை.  புகழ்ந்து பேசுவதற்கு புதிதாகத்தான் சொற்களை உருவாக்கவேண்டும். தனக்குத் தானே மகுடம் சூடிக் கொள்கிற (தமிழ்) சினிமா உலகில், புனைவுப்  பிம்பங்களின் வெளிச்சங்களை விலக்கி, யதார்த்தத்தின் நிழலில் இயங்கிக் கொண்டிருப்பவர். ‘தாரை தப்பட்டை’ என்கிற படம் தமிழ் சினிமா வரலாற்றில் மிக  முக்கியமானது. 1976ம் ஆண்டு, ‘அன்னக்கிளி’யில் அறிமுகமான இளையராஜாவுக்கு இது ஆயிரமாவது படம். உலகில் எந்த இசையமைப்பாளரும் சாதித்திராத,  சாதிக்கவும் சாத்தியங்களற்ற பெருமை இது.

மும்பையில் ஜனவரி 20ம் தேதி இரவு இளையராஜாவுக்கு நடந்த பாராட்டு விழா.
ஆயிரம் சினிமாக்கள். அதில் சோடை என்று ஒன்று சொல்லமுடியாது. ஒரு படத்துக்கு ஐந்து என்று வைத்துக் கொண்டாலும் கூட, மனக்கணக்கு போட்டு  பெருக்கிப் பார்த்தால்... 5 ஆயிரம் பாடல்கள். அதில், 4 ஆயிரத்துக்கும் அதிகமானவை சூப்பர் ஹிட். ஒவ்வொன்றும், மன அழுத்தம் போக்குகிற மாமருந்து.  இப்போது கேட்டாலும், முழுமையாக ஆட்கொள்ளும் ஆற்றல் நிரம்பக் கொண்டவை. பாடல்கள் வசீகரிக்கின்றன; புதிய உலகிற்குக் கை பிடித்து அழைத்துச்  செல்கின்றன என்றால், பின்னணி இசையும் மென் ஒத்தடம். அமைதியாக வழிந்தோடுகிற நீரோடையாக, ஆர்ப்பரித்துப் பாய்கிற பேரருவியாக, பசும் பள்ளத்தாக்குகளின் கீழிருந்து பனிப்புகையாக கிளம்பி வந்து உடல் தழுவும் ஜில் காற்றாக, அவரது பின்னணி இசையும் நம்மை வினோத பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

சிந்துபைரவி. ராஜாவின் இசை இந்தப்படத்தின் உயிர். ராஜாவன்றி, இந்தப் படமில்லை. சாஸ்திரிய சங்கீதங்களையும், நாட்டுப்புற மெட்டுகளையும் குழைத்து  அவர் உருவாக்கிய ராகங்கள், சங்கீத வித்வான்களையும், விமர்சகர்களையும் மெய் மறந்து சபாஷ் போட வைத்த மாயத்தை மறக்கத்தான் முடியுமா? சொல்லால் அடிக்கிற விமர்சகர் சுப்புடுவை கூட சரண்டர் ஆக வைக்கிற வித்தை, ராஜாவின் ஆர்மோனியப் பெட்டிக்கு மட்டும்தானே தெரிந்திருந்தது? எத்தனை  பெருமை இருந்து என்ன பயன்? ஆயிரம் படம் கடந்த அசாதாரண சாதனையை அங்கீகரித்து, பாராட்ட செந்தமிழ் நாட்டில் சிங்கிள் ஆளில்லையே...?

ராஜாவால் உருவாக்கப்பட்ட பிம்பங்கள் தமிழ் சினிமாவில் ஏராளம். ராஜாவின் இசைக்கு வாயசைத்து, சினிமாவை ஆட்சி செய்தவர்களின் பட்டியல் மிகப்  பெரிது. பாட்டுப் பாடிய படியே பசு மாட்டில் பால் கறந்தவர், ஒரு கட்டத்தில் உச்ச நட்சத்திரத்தைக் காட்டிலும் அதிக செல்வாக்குடன் தமிழ் சினிமாவில்  வலம் வந்தார். கலர், கலராக சட்டை போட்டு, லிப்ஸ்டிக் பூசி அவர் நடித்த படங்கள், உச்ச நட்சத்திரங்கள், உலக நாயகன்களுக்கு கடும் சவாலாக விளங்கின.  அந்த வெற்றியின் பின்னணியில் மறைபொருளாக ராஜாவின் இசை இருந்தது. இசை மட்டுமே இருந்தது. இது போல இன்னும் பல படங்களைச் சொல்லலாம்.  பொம்மலாட்டத்தில் வித்தை காட்டுகிற பொம்மைகள் போல நடிகர்கள் கடந்து செல்ல... பின்னணியில் இருந்து அவர்களை முழுமையாக இயக்கியது ராஜ  இசை.

பாரதிராஜா, (காலம் சென்ற) பாலச்சந்தர், மணிரத்னம், பாலா, எஸ்.பி.முத்துராமன், ஆர்.சுந்தரராஜன், பி.வாசு... என முன்னணியில் இருக்கிற / இருந்த இயக்குனர்களின் அடித்தளம், ராஜாவின் இசையால் கட்டமைக்கப்பட்டது. மறுக்கமுடியாது. நடிகர்களுக்காக, நடிகைகளுக்காக, இயக்குனர்களுக்காக படம் ஓடிய  காலத்தை கட்டுடைத்து... இசைக்காகவும், பாடல்களுக்காகவும் படம் ஓடிய ஒரு புதிய பாதை ராஜாவில் எழுப்பப்பட்டது. எனது திருமங்கலம், எட்டாவது  வார்டு இளைஞர் நற்பணி மன்றத்துக்காரர்கள் நான்கு பேர் கூடிப் பேசி ஒரு வாழ்த்து எஸ்எம்எஸ் அனுப்பினால் கூட, அதற்காக ஒரு பாராட்டு விழா நடத்தி  விடுவது தமிழ் சினிமா பாரம்பரியம். அதை உலகத் தமிழர்களிடம் கொண்டு சேர்க்கிற கலைச்சேவைக்கென்றே ஊடகங்கள் கண்ணயராது இயங்கிக் கொண்டிருக்கின்றன. படம் எடுத்து பணம் பார்த்தவர்களை விட, பாராட்டு விழாவுக்கு மேடை அமைத்து பணம் சம்பாதித்தவர்கள் சமீபகாலத்தில்  சென்னையில் அதிகம்.


ராஜாவை கவுரவப்படுத்த வேண்டுமானால், அன்னக்கிளி தொட்டு சிம்பொனி, திருவாசகம்... என பொழுதுக்கொரு காரணம் நியாயமாகவே இருக்கிறது.  ஆனாலும், ஆயிரம் படங்களை கடக்கிற அசாத்திய சாதனையை கவுரவப்படுத்தவேண்டும் என தமிழ் சினிமா பிரம்மாக்களுக்கு ஏன் தோன்ற வில்லை? எந்த  ஹிந்தி பாடல்களின் ஆக்கிரமிப்புக்கு தமிழகத்தில் அழுத்தமாக முற்றுப்புள்ளி வைத்தாரோ... அந்த ஹிந்திப்பட உலகம்தான், ராஜாவை முதலில் அழைத்துப்  பாராட்டியிருக்கிறது. இந்திய சினிமாவின் நிஜ உச்சநட்சத்திரம் அமிதாப் பச்சன் தனது கைப்படவே அழைப்பிதழ் தயாரித்திருக்கிறார். இந்திய திரையுலகின்  பொக்கிஷம் என இளையராஜாவை குறிப்பிட்டு, அவருக்கான பாராட்டுவிழாவில் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என ஒவ்வொருவராக தேடிப்  பிடித்து அழைப்பிதழ் அனுப்பி வைத்திருக்கிறார்.

விழா அரங்கில்,
 மகள்களுடன் கமல்ஹாசன்.
எனது வீட்டுக்குள் இருக்கிற ரத்த சொந்தத்தின் விஷேசத்துக்கு, பக்கத்து வீட்டுக்காரர் அழைப்பிதழ் அனுப்பி கூப்பிடுவது போல, ராஜாவின் இசையால் உடல்  வளர்த்த, ஊன் வளர்த்த தமிழ் சினிமா சகாப்தங்களுக்கு அழைப்பிதழ் அமிதாப்பிடம் இருந்து வந்து சேர்ந்தது. விழாவை முன்னின்று நடத்தக்  கடமைப்பட்டவர்கள், விருந்தாளிகளாக மும்பை போய் இறங்கினார்கள். விழா மேடையில் அமிதாப் பச்சன் ராஜாவின் பெருமைகளை வியந்து போய் பாராட்டிப் பேசினார். உலக நாயகனும், உச்ச நட்சத்திரமும் ‘பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா’வில் பேசுவது போல, விமானத்தில் போகிற போதே எழுதித்  தயாரித்து, மனப்பாடம் செய்ததை ஒப்பித்தார்கள்.

‘ஆயிரம் படங்கள்... அப்பப்பா! உங்கள் இசைப்பயணம் குறித்துப் பேசுங்களேன்’ என்று ராஜாவிடம் கேள்வி வைக்கப்பட்டது. ‘நான் பயணிக்கவே  இல்லையே. அன்னக்கிளியில் எந்த இடத்தில் இருந்தேனோ... அதே இடத்தில்தான் இப்போதும் இருக்கிறேன். எனது இசை தேவைப்படுபவர்கள், பயணித்து  வந்து என்னிடம் பெற்றுச் செல்கிறார்கள்....’ என்ற ராஜாவின் பதிலில், நிஜமாகவே உண்மை இருக்கிறது. பாராட்ட மனதில்லாதவர்கள், அந்தப் பதிலையும்  கூட விமர்சித்து கருத்து பதிவிடுகிறார்கள். இவ்வளவு பெரிய சாதனையை சாதித்தப் பிறகும் அடக்கமாக இருக்கிற அந்த மாமனிதனுக்கு, பாராட்டு விழா  நடத்தி, தம்மை கவுரவப்படுத்திக் கொள்கிற எண்ணம் தமிழ் சினிமாக்காரர்களுக்கு ஏன் இல்லாமல் போயிற்று?

இந்தி சினிமாக்காரர்களுக்கு தோன்றியது, இங்கே ஏன் தோன்ற வில்லை. மிகப்பெரிய சாதனையாளனுக்கு இந்தக் கதி. எனில், அதன் பின்னிருக்கிற இந்திய மானுடவியல் சித்தாந்தங்களின் வீச்சைப் புரிந்து கொள்ளமுடிகிறது(தானே!).

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

11 கருத்துகள்:

  1. மாமருந்து என்பது 100% உண்மை..

    தாரை தப்பட்டை கிளப்பட்டும்...!

    பதிலளிநீக்கு
  2. -------------1976ம் ஆண்டு, ‘அன்னக்கிளி’யில் அறிமுகமான இளையராஜாவுக்கு இது ஆயிரமாவது படம். உலகில் எந்த இசையமைப்பாளரும் சாதித்திராத, சாதிக்கவும் சாத்தியங்களற்ற பெருமை இது.----------------

    மிஸ்டர் பூனைக்குட்டி,

    தவறான செய்தி. தமிழில் எம் எஸ் விஸ்வநாதன் மற்றும் ஷங்கர் கணேஷ் இரட்டையர்கள் ஆயிரம் படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்கள். உங்கள் பெயருக்கேற்றார்போலத்தான் கருத்தும் சொல்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிஸ்டர் காரிகன்,

      ‘பெயருக்கேற்றார் போலத்தான் கருத்தும் சொல்கிறீர்கள்...’ - உங்களின் இந்த வரியைப் படிக்கிற போது, நீங்கள் என்ன உணர்த்த விரும்புகிறீர்கள் என புரியவில்லை. ஆனாலும், பூனைக்குட்டியின் வார்த்தைகள் நூறு சதவீதம் சத்தியமானவை என சான்றளிக்கிறேன். உங்கள் புரிதலில்தான் தவறு இருக்கிறது. ஷங்கர் - கணேஷ் இரட்டையர்கள் என நீங்களே குறிப்பிடுகிறீர்கள். இரண்டு பேராகவோ, மூன்று, நான்கு அல்லது ஐந்து பேராகவோ குழு சேர்ந்து இசையமைத்த படங்களை எல்லாம் நான் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. ‘உலகில் எந்த இசையமைப்பாளரும்...’ என்கிற, எனது கட்டுரை வரி... தனியொரு நபரை மட்டுமே (Singular) குறிக்கிறது. தனிநபராக, ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த ஒரே இசையமைப்பாளர் ராஜா மட்டுமே. சந்தேகமே வேண்டாம்.
      சரி. எம்.எஸ்.விஸ்வநாதன்...?
      எம்.எஸ்.விஸ்வநாதன் ஆயிரத்து 200 + படங்கள் இசையமைத்திருக்கிறார் என்பது உண்மைதான் காரிகன். இந்த ஆயிரத்து 200ல், 700 படங்களுக்கு மேல் டி.கே.ராமமூர்த்தி என்பவருடன் இணைந்தே இசையமைத்திருக்கிறார். மெல்லிசை மன்னர்கள் என்று இவர்களை குறிப்பிடுவார்கள், கவனித்திருக்கிறீர்களா? மற்றபடி, எம்.எஸ்.விஸ்வநாதன் தனியாக இசையமைத்த படங்களின் எண்ணிக்கை 500 + மட்டுமே. ‘பூனைக்குட்டி’ மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லாது இருப்பதால், தமிழ் விக்கிபீடியாவை துணைக்கு அழைக்கிறேன். அதையாவது நம்புவீர்கள் என நம்புகிறேன்.
      http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE._%E0%AE%9A%E0%AF%81._%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D

      நன்றி.

      - பூனைக்குட்டி -

      நீக்கு
  3. பூனைக்குட்டி,

    டெக்னிக்கலாக நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் எம் எஸ் வி மற்றும் ஷங்கர்-கணேஷ் பற்றி நான் சொல்லும் முன்பே இதை நீங்கள் தெளிவு படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இளையராஜாவை டிசைன் டிசைனாக புகழ்வது இதுதான் போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி காரிகன்.

      கட்டுரையிலேயே இந்த விஷயத்தை சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்கிற உங்கள் கருத்து நிஜம்தான். ஏற்றுக் கொள்கிறேன். அடுத்தடுத்த கட்டுரைகளை முழுமையான தகவல்களுடன் எழுத முயற்சிக்கிறேன். உங்கள் ‘வலை’க்கு வந்தேன். இருவரும் ஒரே சாலையில்தான் பயணிக்கிறோம் என்றறிந்த போது கூடுதல் மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

      - பூனைக்குட்டி -

      நீக்கு
  4. Endrendrum RAJA 👍 👍 Real hero👑👑 No words are there 2 prize him👏👏

    பதிலளிநீக்கு
  5. Endrendrum RAJA 👍 👍 Real hero 👑 👑 No words 2 prize him 👏 👏

    பதிலளிநீக்கு
  6. ராஜா என்றும் ராஜாதான் என்றும் ஓரே பாதை இசையில் ஆனால் நாம் தமிழர் என்றுதான் நம் இசையை போற்றி இருக்கின்றோம்! அருமை கட்டுரை!

    பதிலளிநீக்கு
  7. 976ம் ஆண்டு, ‘அன்னக்கிளி’யில் அறிமுகமான இளையராஜாவுக்கு இது ஆயிரமாவது படம். உலகில் எந்த இசையமைப்பாளரும் சாதித்திராத, சாதிக்கவும் சாத்தியங்களற்ற பெருமை இது.----------------

    மிஸ்டர் பூனைக்குட்டி,

    தவறான செய்தி. தமிழில் எம் எஸ் விஸ்வநாதன் மற்றும் ஷங்கர் கணேஷ் இரட்டையர்கள் ஆயிரம் படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்கள். உங்கள் பெயருக்கேற்றார்போலத்தான் கருத்தும் சொல்கிறீர்கள்.//ஹீ காரிகனுக்கு இருக்கும் ஜாதிவெறிக்கு உதாரணம் பல சொல்ல முடியும் இளையராஜா என்றால் இவருக்கு இன்னும் இளக்காரம் கேட்டாள் இசையை கரைத்துக்குடித்த ஜாதிய பெரும் புலவராம்!ஹீ

    பதிலளிநீக்கு
  8. தொடர்ந்தும் பேசலாம் இளையராஜாவை ஏனோ தமிழ் சினிமா உரிய அங்கீகாரம் கொடுத்து பாராட்டவில்லை. தாரை தம்பட்டை வெள்ளிவிழா கான வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு


  9. காரிகனுக்கு எல்லாம் எதற்காக இவ்வளவு முக்கியத்துவம்? பூனைக்குட்டி தொடர்ந்து எழுதவேண்டும். தனிமரம் கருத்துக்களை பாராட்டுகிறேன். டிசைன் டிசனைனாக வேறு யாரை புகழவேண்டும காரிகன்? ராஜமூர்த்தி, கும்பகோணம்.

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...